PUBLISHED ON : ஜூலை 31, 2026 01:44 AM

'யாருக்கு பதவி கிடைக்கும்; யாருக்கு பதவி பறிபோகும் என்பது தான், டில்லியில் இப்போது பரபரப்பான பேச்சாக இருக்கிறது...' என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றப்பட உள்ளதாக, கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. திறமையாக பணியாற்றாத சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தற்போது மத்திய அமைச்சர்களாக உள்ள சிலர் கலக்கத்தில் உள்ளனர். முக்கியமான அமைச்சர் ஒருவர், சமீபத்தில் உயர் அதிகாரிகளை அழைத்து, 'எனக்கு எப்படியும் பதவி பறிபோய் விடும்; இப்போதே பிரிவு உபசார விழா வைத்து விடுகிறேன்...' எனக் கூறி, அவர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
மற்றொரு அமைச்சர், கடந்த சில நாட்களாகவே, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வருகிறார். இதற்கிடையே, 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால், கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததால், அந்தத் துறையை, உணவுத் துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷி கூடுதலாக கவனித்து வருகிறார்.
'அமைச்சரவை மாற்றத்தின் போது, இந்தக் கல்வி அமைச்சர் பதவி, பா.ஜ.,வைச் சேர்ந்த அனுராக் சிங் தாக்குர், ரவிசங்கர் பிரசாத் ஆகியோரில் யாராவது ஒருவருக்கு கிடைக்கும்' என, அவர்களது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர்.
'மோடியின் கடைக்கண் பார்வை யார் மீது விழுகிறதோ, அவர்களுக்குத் தான் பதவி கிடைக்கும்...' என்கின்றனர், பா.ஜ., மூத்த தலைவர்கள்.
