PUBLISHED ON : மே 25, 2026 12:00 AM

'காபி வித் தினமலர்' என்று தான் எங்களது பொழுது விடியும். அந்தளவுக்கு தினமலர் நாளிதழுடன் எங்கள் குடும்பம் பின்னி பிணைந்துள்ளது. உலகம் முழுவதும் என்னன்ன நடந்துள்ளது என்பதையும், நாடு முழுவதும் நடந்த முக்கிய சம்பவங்களையும் தெளிவாக படம் பிடித்து காட்டும் கண்ணாடியாக தினமலர் திகழ்கிறது. அதுபோல, உள்ளூர் செய்திகளை திகட்டத் திகட்ட அள்ளி தருகிறது தினமலர்.
தினமலரில் எங்களுக்கு என்றும் பிடித்த பகுதி 'டீ கடை பெஞ்ச்'. தெரு முனையில் உள்ள டீ கடையில் சாதாரண மக்கள் பேசிக் கொள்ளும் மொழிநடையில், சொல்ல வந்த தகவலை கச்சிதமாக 'நச்' என வெளிப்படுத்துவது டீ கடை பெஞ்சின் சிறப்பாகும். அதுபோல, குறுக்கெழுத்துப் புதிர் பகுதியும் எங்களுக்கு பிடித்தமானது.
'செகண்ட் ப்ரன்ட் பேஜ்' பக்கத்தில் தினசரி இடம் பெறும் 'சொல்கிறார்கள்' பகுதி தன்னம்பிக்கையை வளர்க்கிறது. வேலையிலும், தொழிலிலும் சாதனை படைத்து சிகரம் தொட்டவர்கள் குறித்த இந்த பகுதி இளம் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது. தெளிவான ஆன்மிக செய்திகள் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளன.
யாருக்கும் அச்சப்படாமல், பொதுமக்கள் பிரச்னைகளை எழுதி, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, அதற்கு தீர்வு ஏற்படுத்தித் தருவதில் தினமலருக்கு நிகர் தினமலரே. 'மக்கள் பணியே மகேசன் பணி' என தொண்டாற்றி வரும் தினமலருக்கு 'ராயல் சல்யூட்'.
ஒட்டுமொத்தத்தில், உண்மையின் உரைகல்லாக, செய்திகளை பாரபட்சமின்றி வழங்கி, அறிவுக் களஞ்சியமாக திகழும், அனைத்து தரப்பினரும் விரும்பும் தினமலர் நாளிதழின் பணி சிறக்கவும், ஆயிரமாயிரம் ஆண்டுகள் செய்தி சேவை தொடரவும் வாழ்த்துகிறேன்.
ரவி வெங்கடராமன்
முழு நேர இயக்குனர், பிளாக் கோல்ட் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட், சென்னை
