/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
நேர்கொண்ட பார்வையோடு பணியாற்றும் 'தினமலர்'
/
நேர்கொண்ட பார்வையோடு பணியாற்றும் 'தினமலர்'
PUBLISHED ON : நவ 07, 2025 12:00 AM

பவள விழா காணும் 'தினமலர்' நாளிதழுக்கு வாழ்த்துகள்!
தமிழகத்தில் தேசியத்தையும், தெய்வீகத்தையும், ஊட்டி வளர்த்திடும் அரிய பணியில் அயராது உழைத்திடும் 'தினமலர்' நாளிதழ் 75வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பது தமிழர்கள் ஒவ்வொருவரையும் மகிழச் செய்யும் தருணம். 'தினமலர்' நாளிதழை தொடங்கிய பெருமதிப்பிற்குரிய டி.வி.ராமசுப்பையர், தமிழகத்தில் தேசிய கருத்துக்களை விதைப்பதிலும், வேரூன்ற செய்வதிலும் முனைப்புக் கொண்டவராக இருந்தார். தினமலரின் அதிபராகவும், ஆசிரியராகவும் வெற்றிகரமாக தன் பயணத்தை நடத்தினார். அவரை அடியொற்றி, அவர் காட்டிய வழியில், அவரது வாரிசுகளும், குடும்பத்தினரும் அரும் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் சமூக, அரசியல் களத்திற்கு 'தினமலர்' நாளிதழின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக, அதில் தன்
நிலைப்பாட்டை தயங்காமல் தெரிவிக்கும் தன்னிகரற்ற, துணிச்சல் மிக்க நாளிதழாக 'தினமலர்' விளங்கி வருகிறது. அந்த நிலைப்பாடு தான் என்ன?
தமிழர்களின் நலம், தமிழகத்தின் நலம், தேசத்தின் நலம். இந்த மூன்றில், எதிலும் சமரசம் செய்து கொள்ளாதது தான் அதன் நிலைப்பாடு. அதே போல், கலாசாரம், பண்பாடு, தேச ஒற்றுமை ஆகியவற்றிலும் தினமலர் சமரசம் செய்து கொள்வதில்லை. இப்படி சமரசமே செய்யாமல், நேர்கொண்ட பார்வையுடன் பணியாற்றி வருகிறது.
அது மட்டுமல்லாமல், தமிழகத்தில் தேசிய உணர்வுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போதெல்லாம் முன்கள பணியாளராக, முன்னின்று போராடுகிறது
தினமலர். இதனால், நெருக்கடிகளுக்கு நடுவே, நெருப்பாற்றில் நடைபோடும் நிலை அதற்கு அதிகம்.
'தினமலர்' செய்திகளை தரும் விதம் அலாதியானது. அதன் தலைப்புகள், உள்ளே என்ன செய்தி சொல்லப்பட்டிருக்கிறது என்று அறிந்து கொள்ளும் ஆவலை துாண்டி, அதை விறுவிறுப்பாக படிக்க வைத்திடும். வடிவமைப்பும், உள்ளடக்கமும் வேறுபட்ட வகையில் தனி முத்திரை பதிப்பவை. மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து, அவற்றை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதில் தினமலரின் பணி அபரிமிதமானது. அதே நேரம் அரசின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டுசெல்லும் பணியையும் 'தினமலர்' சிறப்பாக செய்து வருகிறது.
மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை, தமிழகத்தில் ஒவ்வொரு பயனாளிக்கும் கொண்டு சென்றதில் தினமலரின் பங்கு குறிப்பிடத்தக்கது. சுணக்கம் ஏற்படும் இடங்களில் அவற்றை சுட்டிக்காட்டி சரிசெய்ய வாய்ப்பு ஏற்படுத்துவதில் மத்திய அரசுக்கு உற்ற நண்பனாக திகழ்கிறது. பவள விழாவைப் போல இன்னும் பல விழாக்களை 'தினமலர்' கொண்டாட வேண்டும். தமிழ் சமூகத்துக்கும், தமிழ் மொழிக்கும் 'தினமலர்' தொடர்ந்து பெரும் தொண்டாற்றிட வேண்டும். தினமலரின் வெற்றிக்கு தொடர்ந்து உழைத்து வரும் அதன், ஆசிரியர், நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் 'தினமலர்' குடும்பத்தினர் என அனைவருக்கும் என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தினமலரின் வெற்றி பயணம் என்றென்றும் தொடர என் மனப்பூர்வமான வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்.
ஜெய் ஹிந்ந்! ஜெய் பாரத்!
எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர்,
பார்லிமென்ட் விவகாரங்கள் & தகவல் மற்றும் ஒலிபரப்பு

