PUBLISHED ON : ஏப் 16, 2026 12:00 AM

சிறுவயது முதல் சில பழக்கங்கள் நம்மை ஈர்ப்புடன் விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும். அவ்வகையில், 55 ஆண்டுகளாக எனது 'தினமலர்' நாளிதழ் வாசிப்பும் தொடர்கிறது. பல்வேறு சமூக ஊடகங்களில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் தினமலர் நாளிதழ் வாசிப்பு தனித்துவமானது. அன்று முதல் இன்று வரை, தலைமுறைக்கு தகுந்தாற் போல் செய்திகளை சுவாரசியமாக சொல்வதில் தினமலர் நாளிதழுக்கு நிகர் யாரும் இல்லை. காலையில் எழுந்தவுடன், இதன் செய்திகளை வாசிப்பதன் மூலம் உலக நடப்பை சில நிமிடங்களில் புரிந்து கொள்ள முடியும்.
மருத்துவ துறையில் அன்றாடம் எத்தனையோ கண்டுபிடிப்புகள், வளர்ச்சி, புதிய நடைமுறை என்று வளர்ந்து கொண்டே செல்கிறது. இதனை எல்லாம் பல்வேறு துறை மருத்துவர்கள் அன்றாடம் கவனித்து கொண்டிருப்பதும் நடைமுறையில் சிரமமான பணியாகவே இருக்கும். ஒரு டாக்டர் மருத்துவ துறை தொடர்பான தகவல்களை மட்டுமே அறிந்து, சமூக வாழ்வியலை தவறவிடும் வாய்ப்பு அதிகம். அதை தவிர்க்க, தினமலர் நாளிதழ் போன்ற நாளிதழ்கள் வருவது அவசியம். தினமலர் நாளிதழ் அறிமுகம் செய்த மருத்துவ மலர் ஆண்டுக்கு இருமுறை பல்வேறு தகவல்களை தருகிறது.
பல்வேறு துறைகளில் பிசியாக இருக்கும் பலருக்கும் அறிவியல், ஆன்மிகம், கலை, கலாச்சாரம், சுற்றுலா, ஜோதிடம் என்று தங்களுக்கு தனித்துவமான சில விஷயங்களை பிடித்த பட்டியலில் வைத்திருப்பார்கள். நம் சந்தேகங்களை யாரிடம் போய் கேட்பது என்று சிந்திக்கும் போது, வாரமலர் அந்துமணி பதில்கள் நினைவுக்கு வரும்.
அரசியல், அறிவியல் என எது பற்றிய செய்தியாக இருந்தாலும், படிக்கும் போது சுவாரசியமாக இருக்க வேண்டும். அது தினமலர் நாளிதழின் அனைத்து செய்திகளிலும் இருப்பதை உணரலாம்.
பத்திரிகைகளில் வரும் பல விதமான நல்ல தகவல்கள், பலரின் வாழ்வில் நல்ல முடிவுகளை எடுக்க உதவும் என, தினமலர் நாளிதழ் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. இதனால் தான் இன்றைய 'ஜென்-சி' தலைமுறையினரை கூட தீவிர வாசகர்களாக தினமலர் நாளிதழ் வைத்திருக்கிறது. வாசிப்பு என்பது ஒரு அறிவு தேடல் என்பதோடு தேடிய அறிவை சரியானது தான் என்று சீர் தூக்கிப் பார்க்கும் ஒரு உரைகல். தினமலர் அதன் பெயரில் வைத்துள்ள 'உண்மையின் உரைகல்' என்ற சொல் அதற்கு நிரம்பவே பொருந்தும்,
டாக்டர் பி.எஸ்.நாகேந்திரன்
இயக்குநர் தேவகி ஸ்கேன் மற்றும் சிறப்பு மருத்துவமனை, மதுரை
