/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
தேவேந்திர குலத்தவருக்கு குரல் கொடுத்தது 'தினமலர்'
/
தேவேந்திர குலத்தவருக்கு குரல் கொடுத்தது 'தினமலர்'
PUBLISHED ON : டிச 27, 2025 12:00 AM

தினமலர், தமிழ் பத்திரிகை உலகில் 74 வருடங்களுக்கு மேலாக, தனது செல்வாக்கை நிலைநிறுத்தி வருவது பாராட்டுக்குரியது. கடந்த 15 வருடங்களில், சமூக வலைதளங்களின் ஆதிக்கம் மிகவும் அதிகரித்துவிட்டது. உலகம் மற்றும் உள்ளூர்ச் செய்திகளை அறிந்துகொள்ள பல காலம் காத்துக் கிடந்துள்ளோம். ஆனால் வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் செய்திகளைக் கொண்டு சேர்ப்பதில் ஆதிக்கம் செலுத்தின. அதேபோன்று, அண்மையில் கையடக்க கைபேசிகள் மூலமாக உள்ளூர் மற்றும் உலக செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதன் காரணமாக, அச்சு மற்றும் ஒளிபரப்பு ஊடகங்களின் முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது. பிரசித்தி பெற்ற நாளிதழ்கள் நாள்தோறும் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. நாளிதழ்களை வாசிப்போரின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. கொரோனா காலகட்டத்தில் நாளிதழ்களைக்கூட அச்சிட முடியாத மிகவும் அசாதாரண சூழல் நிலவியது. இதுபோன்ற பல்வேறு விதமான செயற்கை, இயற்கை தடைகளையும் தாண்டி, தனது தனித்துவத்தை தினமலர் நிரூபித்துள்ளது.
இன்றும் தமிழக நாளிதழ்களில் பெரும்பான்மையான மக்களின் கைகளில் தவழ்வது தினமலர் நாளிதழே. வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் காலச்சூழல் காரணமாக மலராவிட்டாலும், வீட்டின் வாசலில் தினமலர் மலராத நாளே இல்லை என்ற அளவிற்குப் பல முக்கியமான பண்டிகை, விடுமுறை நாட்களிலும் தவறாது கிடைக்கக்கூடிய ஒரே நாளிதழ் தினமலர்.
இந்நாளிதழ் வெறுமனே செய்திகளை அப்படியே கொடுக்கும் உயிரோட்டமற்ற ஊடகம் அல்ல. தமிழ் மொழி, தமிழ் மண், தேசிய சிந்தனை ஆகியவற்றை உள்ளடக்கிய, இம்மண்ணிற்கு ஏற்றபடி உயிரோட்டமான ஊடகமே தினமலர்.
இதில் வெளியாகும் செய்திக்கு நம்பகத்தன்மை அதிகம். அதன் காரணமாகவே எல்லா சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு தலைநிமிர்ந்து நிற்கிறது. தவறுகளை சுட்டிக்காட்டுவதில் தினமலர் பாரபட்சம் காட்டுவதில்லை. இதன் காரணமாக, அரசியல் கட்சித் தலைவர்கள் பலருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் தினமலர் மீது கோபம் வந்திருக்கும். ஆனால், உண்மை, நெல்லிக்கனியை போல, முன்னே கசக்கும், பின்னே இனிக்கும்.
மேலும், தினமலரின் செய்தி வெளியிடும் பாங்கு வித்தியாசமானது. பல நேரங்களில் கிண்டலும் கேலியுமான தலையங்கங்கள் இருக்கும். இதுவே, இதன் தனிச்சிறப்பு. காலையில் ஒரு மணி நேரத்தில் உலக செய்திகள் முதல் உள்ளூர் செய்தி வரை, தினமலர் மூலம் செய்தியின் முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள முடிகிறது.
புதிய தமிழகம் கட்சிக்கும் தினமலருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. குறிப்பாக, 2017 முதல் 2021 வரை, தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் மற்றும் பட்டியல் வெளியேற்றம் வலியுறுத்தி நாங்கள் போராடிக் கொண்டிருந்தபோது, போராட்டத்தின் ஆழ்ந்த உண்மை, சமூக நோக்கத்தைப் புரிந்துகொண்டு, தமிழ்நாடெங்கும் விரிவான செய்தியை முதல் பக்கத்திலேயே வெளியிட்டதை எங்களால் என்றும் மறக்க முடியாது. அதற்காகத் தினமலருக்கு நன்றிகடன்பட்டு உள்ளோம்.
இனிவரும் காலங்களிலும் எத்தனை நவீன ஊடகங்கள் வந்தாலும், தைரியமாக செய்திகளை வெளியிடும் பாங்கின் காரணமாகவும், நம்பகத்தன்மை காரணமாகவும், அனைத்துச் செய்திகளையும் உள்ளடக்கி, அதன் ஆதி முதல் அடி வரை அலசி ஆராய்வதால், தினமலர் நாளிதழ் உலகில் நிலைத்து நிற்கும்; நிலைத்து நிற்க வேண்டும்.
மேலும், 1951ல் துவங்கப்பட்ட தினமலர், 74 ஆண்டுகள் தமிழகத்தில் கோலோச்சி அதன் நிறுவனர் ராமசுப்பையர் அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், அவரது புதல்வர்கள் மறைந்த கிருஷ்ணமூர்த்தி அவர்களும், பத்ம ஸ்ரீ லட்சுமிபதி அவர்களும், அவர்களுடைய குடும்பமும் தொடர்ந்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்!
தொடரட்டும் தினமலரின் ஜனநாயக தொண்டு!
- டாக்டர் கிருஷ்ணசாமி,
தலைவர், புதிய தமிழகம்

