/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
வாசிக்க தெரியாதவர்களும் வாசித்த 'தினமலர்'
/
வாசிக்க தெரியாதவர்களும் வாசித்த 'தினமலர்'
PUBLISHED ON : பிப் 25, 2026 12:22 AM

எனது சிறுவயதில், நான் வசித்த கிராமத்தில், பள்ளியில் கல்வி பயிலாத முதியோர், அக்கம்பக்க கடைகளிலும் டீக்கடைகளிலும், காலை முதல் மாலை வரை, 'தினமலர்' நாளிதழை பார்த்து, ஒவ்வொரு எழுத்தாக வாசித்து, எழுத்துக்கூட்டி படிப்பதை பார்த்திருக்கின்றேன். காலப்போக்கில் அவர்கள் எந்த ஒரு புத்தகத்தையும் எந்த ஒரு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான விஷயத்தையும் சரளமாக படிப்பதை பார்த்திருக்கின்றேன்.
அதே போல், 40 வருடங்களுக்கு முன்னால் கூட, பள்ளிக்கு செல்லாமல், தினமலர் நாளிதழை படித்துப் படித்து, தங்கள் அறிவை வளர்த்துக் கொண்டவர்களை நான் அறிவேன். அதில் கிடைத்த அறிவின் மூலம், பெரும் நகரங்களுக்கு சென்று, சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டு, காலப்போக்கில் பெரும் தொழில் அதிபர்களாகி, பல்லாயிரம் பேருக்கு வேலை கொடுத்து, தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் சர்வதேச அளவிலே பெரும் வணிகர்களாக திகழ்கின்றார்கள். இந்த அறிவை கொடுத்தது தினமலர் தான் என்பதை மறக்க முடியுமா?
நான் பாரம்பரிய மருத்துவர். நான் பயிலும் 2,000 ஆண்டு கால அனுபவ அறிவியல் மருத்துவத்தை, 150 ஆண்டு கால அறிவியல் குறை சொல்வதையும், கார்ப்பரேட்டின் அதி ஆதிக்கத்தையும் கண்டுகொள்ளாமல், உண்மையான பாரம்பரிய மருத்துவத்தின் மகத்துவத்தை வெளிக்கொண்டுவருவது உண்மையின் உரைகல் தினமலர் தான்.
புரட்சி தலைவர், புரட்சித்தலைவி அவர்கள் வழியில், புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், எளியவனாகிய என்னை தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக அறிவித்தபோதில் இருந்து, தேர்தல் முடிவு வரை, ஒவ்வொரு வீட்டிற்கும் என்னை கொண்டு சென்றது தினமலர் தான்.
தினமலரில் வரும் 'டீக்கடை பெஞ்ச்' மட்டும் அல்ல, அனைத்து பகுதிகளும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, லஞ்சம், முறைகேடு உட்பட சமூக விரோத செயல்களை தட்டிக்கேட்கின்றன. கடந்த 75 ஆண்டு காலமாக, உண்மையை உண்மையாகவே வெளிக்கொணர்ந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது தினமலர் தான்.
வரும் காலத்தில் தினமலரின் வலிமை வளர பிரார்த்திக்கின்றேன்
அன்புடன்,
வைத்தியர் ஆர்.எஸ். வேலுமணி
மேலாண்மை இயக்குனர், புத்தூர் கட்டு போன் அண்ட் ஜாயிண்ட் சென்டர், சென்னை

