PUBLISHED ON : மே 13, 2026 12:00 AM

தினமலர் என்றவுடன் என்னுடைய நினைவுக்கு வருவது, சிறுவர்மலரும் வாரமலரும் தான். ஒன்றிரண்டு வீடுகளில் டிவி இருக்கும் என்பதை தவிர்த்து, பெரிதாக எந்தவிதமான பொழுதுபோக்குகளும் இல்லாத அந்த காலத்தில், பத்திரிகைகளும் கதைப்புத்தகங்களும் தான் ஒரே புகலிடம். கதைப் புத்தகங்கள் வாங்குவது சாதாரண விஷயமில்லை. அதனால் எங்களுக்கு கிடைப்பது சிறுவர் மலரும் வார மலரும் தான். பாடப்புத்தகத்தை எப்படி நண்பர்களுடன் சேர்ந்து படிப்பேனோ அப்படியே சிறுவர் மலரையும் நண்பர்களுடன் சேர்ந்தே படிப்பேன். அப்படித்தான் வளர்ந்தேன். பொது அறிவை வளர்த்துக் கொண்டேன்.
தமிழ் வழி கல்வியில் படித்த நான், அதன் பின் பொறியியல் கல்லூரியில் சேர்ந்ததும், ஆங்கிலத்தில் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த மொழியுடன் பரிச்சியத்தை ஏற்படுத்திக் கொள்ள, ஆங்கில பத்திரிகை படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அது கஷ்டமாக இருக்கும் என்பதால், முதலில் தினமலரை படிப்பேன். அதிலிருக்கும் செய்தி ஆங்கில பத்திரிகையில் வந்திருந்தால் அதை படிப்பேன். இப்படித்தான் எனது ஆங்கில புரிதல் தொடங்கியது.
அன்று என்னுடைய கல்விக்கு தினமலர் எப்படி கைகொடுத்ததோ, அதேபோல் இன்று எங்கள் தொழிலுக்கும் கைகொடுக்கிறது. எங்களுடைய 'மேஜிக் 20' நிறுவன நிகழ்ச்சிகளுக்கு தினமலர் அளித்து வரும் ஆதரவு எங்களுக்கு மிகவும் உற்சாகமூட்டுவதாக இருக்கிறது.
தமிழ்பத்திரிகை உலகில் தொழில்துறை செய்திகள் என்றாலே தங்கம், வெள்ளி, சென்செக்ஸ், கச்சாஎண்ணெய், ரூபாய் மதிப்பு என சுருங்கிவிட்ட சூழலில், தற்போது வந்துகொண்டிருக்கும் 'லாபம்' மற்றும் 'தொழில்' ஆகிய இரண்டு பக்கள் பாராட்டுக்கு உகந்தது. தொழில் துறையினருக்கான அரசாங்கத்தின் அறிவிப்புகள், சலுகைகள் - அது மாநில அரசினுடையதாக இருந்தாலும் சரி; மத்திய அரசினுடையதாக இருந்தாலும் சரி- தமிழில் இப்போது தவறாமல் தரக்கூடிய ஒரே பத்திரிகை, தினமலர் தான் என உறுதியாக சொல்ல முடியும்.
தொழில் துறை குறித்த விசாலமான பார்வையை தமிழர்களுக்கு தொடர்ந்து மென்மேலும் தினமலர் வழங்க வேண்டும். இதுவே என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான தொழில்முனைவோரின் விருப்பம்.
வி.கார்த்திகேயன்
இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, மேஜிக் 20 தமிழ்
