PUBLISHED ON : மே 24, 2026 12:00 AM

திருவனந்தபுரத்தில் உதித்து, நெல்லை மண்ணை மிதித்து, திருச்சி மலைக்கோட்டையைத் துதித்து, சென்னையில் கால் பதித்து, தமிழகம் முழுவதும் அடுத்தடுத்து 10 பதிப்புகளைத் தொடங்கி, இடைத்தடையின்றி தொடரும் வெற்றி சரித்திரம் தினமலருக்கு உண்டு.
சற்றும் சளைக்காமல், தொடர்ந்து தொய்வின்றி 75 ஆண்டுகளாக பணியாற்றி, தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது என்பது ஓர் இமாலய சாதனை. தினமலர் குலக்கொழுந்துகள் அனைவருமே தங்களை முழுமையாக தினமலருக்கு அர்ப்பணித்துக் கொண்டது என்பது அந்த நிறுவனத்தின் தங்கு தடையில்லா வளர்ச்சிக்குத் தகுந்த தடயமாகும்.
சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வாகைச்சரிதை புரிந்து வருவதற்கான காரணங்களுள் முக்கியமானது 'தினமலர்'. விளம்பரதாரர்களின் வேட்டைக்களம் என்று தினமலரைக் கூறலாம். என்ன நோக்கத்திற்காக தினமலரில் விளம்பரம் கொடுக்கிறோமோ அந்த நோக்கம் சற்றும் சரிவின்றி சதம் அடிக்கும் உச்சமாக நிச்சயம் ஈடேறிவிடும்.
சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமம், தினமலரில் வழங்கிய விளம்பரங்களின் மூலமாக ஈட்டிய மேன்மை ஏராளம். எங்களைப் போன்றே ஒவ்வொரு விளம்பரதாரரும் தினமலரின் விளம்பரங்களின் மூலமாக வர்த்தகத் துறையில் விற்பனை வரலாற்றை சாதித்து உள்ளனர்.
சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமத்தின் செய்திகளை தினமலர் வெளியிடும் போதெல்லாம், இக்குழுமம் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஆயத்தமாகும் அளவுக்கு அழுத்தமான அடித்தளம் கிடைத்து விடுகிறது.
தினமலர் நாளிதழுடன் ஒருங்கிணைந்து கல்வித் திருவிழா நிகழ்ச்சிகளை நடத்தினோம். அவற்றின் வாயிலாக இளையோர் குலத்தின் இதயத்தைத் தொட்டோம். இதனாலேயே இமய முகட்டையே முட்டித் தொட்டுவிட்டோம்.
தினமலர் தொட்ட ஒவ்வொரு நிறுவனமும் வளர்ச்சிப் பாதையில் வளம் கண்டு வருவதால் தினமலரை ஒரு 'கைராசி பத்திரிகை' எனலாம்.
ஜெயித்துக் காட்டுவோம், மாணவர் வழிகாட்டி போன்ற அடுத்தடுத்த கல்வித் திருவிழாக்களை தினமலர் தொடர்ந்து ஆண்டுதோறும் விடுபடாமல் நடத்தி வருவதால், தமிழக மாணவர்களின் கல்வித் தரம் அகில இந்திய அளவிற்கு உயர்தரத்தை பெறுவதற்கு தினமலரின் அளவுகடந்த பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
தினமலர் வழங்கிய ஒத்துழைப்பு காரணமாக, 32 ஆயிரம் மாணவர்கள் இதுவரை சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமத்தில் பயின்று, பட்டம் பெற்று, வளமான வாழ்வில் வசதியாக வசிக்கின்றனர். உள்நாட்டில் மட்டுமன்றி, உலக நாடுகளிலும் அவர்களின் வெற்றி பவனி முற்றித் தொடர்கிறது.
தினமலர் என்னும் அரியாசனத்தில் அடியேனுக்கும் சரியாசனம் கிடைத்த சந்தோஷத்தில் எங்கள் நிறுவனம் அனுதினமும் நன்றி பெருக்கோடு தினமலரை நோக்கி வணங்கிப் பணிகிறது. தினமலரும், சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமமும் ஒருங்கிணைந்து நடத்துவது வர்த்தகக் கூட்டணி அல்ல, இது ஒரு சமூக மேம்பாட்டுக்கான, மாணவ முன்னேற்ற தோழமைக் கூட்டணி என்று கூறலாம்.
நூற்றாண்டை நோக்கி நகரும் தினமலர் நாளிதழ், நாற்று நட்டது போல் பல நிறுவனங்களை அரவணைத்து வருகிறது. இந்த நாற்றுகள் வளர்ந்து, கிளைத்து, விருட்சங்களாய் நிமிரும் காலம் கண் முன்னே தெரிகின்றது. எங்கள் குழுமத்தோடு தினமலர் கொண்டிருக்கின்ற இணைப்பும், பிணைப்பும் நீண்ட நெடுங்காலம் நின்று நிலைத்து, மாணவக் குலத்துக்கு நிழலாக வேண்டும் என்று இதயபூர்வமாக வேண்டிக் கொள்கிறேன்.
பத்திரிகை நடத்துவது என்பது நெருப்பாற்றில் நீந்துவதற்கு சமமானது என்று அமரர் கல்கி அவர்கள் பல முறை கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட கடினமான பணியில், கொஞ்சம் கூட சமரசம் செய்யாமல், கடந்த 75 ஆண்டுகளாக தொடர்ந்து தங்களை அர்பணித்து வரும் நிர்வாகத்தினருக்கும், ஊழியர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
தர்மத்தை கட்டிக்காத்து வரும் ஒரு சில நாளிதழ்களில் முக்கியமானது தினமலர். நானும் அதன் வாசகர் மற்றும் விளம்பரதாரர் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆர். பூமிநாதன்,
சேர்மன், சென்னைஸ் அமிர்தா கல்விக்குழுமம்
