/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
மறுவாழ்வு அலுவலர் காலியிடங்களில் தாசில்தாரை நியமிக்க உத்தரவு: 14 மாவட்டங்களில் தற்காலிக ஏற்பாடு
/
மறுவாழ்வு அலுவலர் காலியிடங்களில் தாசில்தாரை நியமிக்க உத்தரவு: 14 மாவட்டங்களில் தற்காலிக ஏற்பாடு
மறுவாழ்வு அலுவலர் காலியிடங்களில் தாசில்தாரை நியமிக்க உத்தரவு: 14 மாவட்டங்களில் தற்காலிக ஏற்பாடு
மறுவாழ்வு அலுவலர் காலியிடங்களில் தாசில்தாரை நியமிக்க உத்தரவு: 14 மாவட்டங்களில் தற்காலிக ஏற்பாடு
PUBLISHED ON : ஆக 20, 2024 12:00 AM

மதுரை : தமிழகத்தில் 14 மாவட்டங்களில் காலியாக உள்ள மாவட்ட மறுவாழ்வு அலுவலர் பணியிடங்களில் தற்காலிகமாக தாசில்தாரை நியமிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாவட்ட மறுவாழ்வுத்துறை செயல்பட்டு வருகிறது. முதல்வரின் நேரடி பார்வையில் உள்ள இத்துறையில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, நீலகிரி, கரூர், ஈரோடு, பெரம்பலுார், ஈரோடு, நாமக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருப்பத்துார் மாவட்டங்களில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக இப் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இவற்றை அருகில் உள்ள மாவட்ட அலுவலர்கள் 'பொறுப்பாக' கவனிக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் பல ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவது, சிறப்பு முகாம்கள் நடத்துவது, உபகரணங்கள் வழங்குவது, தொழில் வழிகாட்டுவது என ஏராளமான பணிகள் நடக்கின்றன. ஒரே அதிகாரி 2 மாவட்டங்களை கவனிப்பது சரியில்லை எனக்கூறி மாற்றுத்திறனாளிகள் அடிக்கடி போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழிலும் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக மறுவாழ்வு அலுவலர் இல்லாத மாவட்டங்களில் தாசில்தார் ஒருவரை இப்பணியிடத்தில் 'அயற்பணி'யில் (டெபுடேஷன்) நியமிக்க கூடுதல் கமிஷனர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.
மறுவாழ்வுத்துறை அலுவலர்கள் கூறியதாவது: ரெகுலர் பணியில் நியமிக்காமல் அயற்பணியில் தாசில்தாரை நியமிக்க உள்ளனர். மறுவாழ்வுத்துறையில் 5க்கும் மேற்பட்ட பிரிவினர் இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவி உயர்வுக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு பதவி உயர்வை வழங்கி பணியிடத்தை நிரப்பலாம்.
மாற்றுத் திறனாளிகளை அணுக இத்துறையினரே அனுபவ பயிற்சி மூலம் சிறப்பாக செயல்படுவர். இத்துறைக்கு சம்பந்தமே இல்லாத வருவாய்த்துறையினரை நியமிப்பதால் பணிகளில் சுணக்கமே ஏற்படும்.
விரைவில் மேலும் சில மாவட்டங்களில் உள்ள மறுவாழ்வு அலுவலர்கள் ஓய்வு பெறும் வயதில் உள்ளனர்.
அதன்மூலம் பணியிடங்கள் அதிகம் காலியாகுமே தவிர இத்துறை பிரச்னைக்கு தீர்வு வராது. பதவி உயர்வில் உள்ள சிலர் வழக்கு தொடுத்து இருப்பதால் பணி நியமனம் தாமதமாவதாக கூறுகின்றனர்.
அதனை விரைந்து முடிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

