/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
பல்லாங்குழியான சாலை சீரமைப்பு பணி துவக்கம்
/
பல்லாங்குழியான சாலை சீரமைப்பு பணி துவக்கம்
PUBLISHED ON : நவ 07, 2025 12:00 AM

ஸ்ரீபெரும்புதுார்: நம் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, சுங்குவார்சத்திரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே பல்லாங்குழியாக இருந்த சாலையை சீரமைக்கும் பணியை, நெடுஞ்சாலைத் துறையினர் துவக்கி உள்ளனர்.
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தினமும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்களால், நெரிசல் மற்றும் வாகன விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
விபத்தை தவிர்க்க, சென்னை --- பெங்களூரு தேசிய நான்குவழிச் சாலையை, ஆறுவழிச் சாலையாக அகலப்படுத்தவும், 18 இடங்களில் சிறுபாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது.
இதற்காக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, மூன்று பிரிவுகளாக ஒப்பந்தம் விடப்பட்டது. இதன்படி, மதுரவாயல் -- ஸ்ரீபெரும்புதுார் வரை, 23 கி.மீ., ஸ்ரீபெரும்புதுார் - - காரப்பேட்டை வரையில், 34 கி.மீ., காரப்பேட்டை - வாலாஜாபேட்டை வரையில், 36 கி.மீ., துாரம் விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன் பெய்த கனமழையில், சாலை பல்வேறு இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. குறிப்பாக, சுங்குவார்சத்திரம் மேம்பாலம் அருகே, வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்டு வந்தது.
இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, பல்லாங்குழியான சாலையை சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக சேதமான சாலையை, 'மில்லிங்' செய்து, பின், தார் ஊற்றி சீரமைக்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

