PUBLISHED ON : மே 14, 2024 12:00 AM

தமிழக சட்டத்துறை அமைச்சர்ரகுபதி: எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். அப்போதுதான் சரியான எதிர்க்கட்சியாக இருக்கும். அதை விடுத்து வேறுவிதமான விமர்சனங்களை வைத்தால், அவருடைய பதவிக்கு ஆபத்து ஏற்படக் கூடிய சூழ்நிலை உருவாகும். தேர்தல் முடிவுக்குப் பிறகு அ.தி.மு.க., தலைமை செங்கோட்டையன் தலைமையில் செல்லப் போகிறதா, வேலுமணி தலைமையில் செல்லப் போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அ.தி.மு.க.,வில் தேர்தல் முடிவுக்கு பின் மிகப்பெரிய பிளவு உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வுல பிளவு வரும்னு அடிச்சு சொல்றாரே... நெருப்பில்லாமல் புகையாது என்பது போல், லோக்சபா தேர்தல் முடிஞ்சதும்அ.தி.மு.க.,வை உடைக்கிற பிளான் ஏதும் வச்சிருக்கீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம்: கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க., ஆட்சி என்பது, மக்களை வாட்டி வதைக்கிற ஆட்சியாக, மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாத ஆட்சியாக உள்ளது. போதையில் மூழ்கியுள்ள ஆட்சியாக, சாராய ஆட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிற நிலையில், தி.மு.க., ஆட்சி 'செயலாட்சி' என, முதல்வர் பதிவு செய்திருப்பது நகைப்புக்கு உரியதாக உள்ளது. தமிழகம் போதை மாநிலமாக மாறி விட்டது.
டவுட் தனபாலு: தமிழகத்தின்,'டாஸ்மாக்' விற்பனையில், உங்களுக்கு வேண்டியவங்களின், 'மிடாஸ்' நிறுவனத்தின் சரக்குகளும் பெரும் பங்கு வகிக்கின்றன... அதனால, தமிழகம் போதையில் மிதப்பதில், அவங்களுக்கும் பெரும் பங்கு இருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: வெயில் காலத்தில் ஆலமரத்தில் சில இலைகள் உதிரும். பல இலைகள் புதிதாக துளிர்க்கும். அதுபோல் அ.தி.மு.க.,வில் இருந்து சிலர் போவர்; பலர் வருவர். வேப்பமரம் போல பட்டு போய்விடும் என நினைத்தனர். அ.தி.மு.க., பீனிக்ஸ் பறவை போன்றது. அழிவது போல தெரியும்; ஆனால், வீறுகொண்டு எழும்.
டவுட் தனபாலு: நீங்க சொல்றது எல்லாம், ஜெ., காலத்துல இருந்த அ.தி.மு.க., தான்... வரும் லோக்சபா தேர்தல் முடிவுகளில் தான், அ.தி.மு.க.,வின் எதிர்காலமும் அடங்கியிருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!

