PUBLISHED ON : மே 31, 2024 12:00 AM

தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில், இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை நிறுத்தி, மாற்றுப் பாதையில் செல்லுமாறு போலீசார் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இருவர், போலீசார் மற்றும் ஊர்காவல் படையினரை கையால் தாக்கி தகராறு செய்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், கஞ்சா போதையில் வாலிபர்கள், போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல் பரப்பப்படுகிறது. உண்மைக்கு மாறாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
டவுட் தனபாலு: போலீசாரை அடிச்சவங்க போதையில் இருந்தாங்களோ, இல்லையோ... ஆனா, போலீசாரையே கைநீட்டி அடிக்கிற அளவுக்குதமிழகத்துல சட்டம் - ஒழுங்கு மோசமா இருக்கு என்பதை, 'டவுட்'டே இல்லாம ஒத்துக்கிட்டீங்களே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: ஜெயலலிதாவை ஒரு மதத்துக்குள் அடக்கும் வகையில், இழிவான செயலை செய்து வருகிறார் அண்ணாமலை. அவர் அரசியல்வாதி அல்ல; அரசியல் வியாதி; வியாபாரி. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள் கடத்தல், கஞ்சா புழக்கத்தில், முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதையெல்லாம் பற்றி அண்ணாமலை என்றைக்காவது பேசியிருக்கிறாரா?
டவுட் தனபாலு: தமிழகத்துல சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்குது... ஆளுங்கட்சியை எதிர்த்து போராட வேண்டிய ரெண்டு முக்கியமான எதிர்க்கட்சிகளும், இப்படி உங்களுக்குள்ள அடிச்சுக்கிட்டு கிடந்தா, ஆளுங்கட்சிக்கு கொண்டாட்டமாபோயிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: பிரதமர் மோடி கடவுள் என்றால் அரசியல் செய்யக் கூடாது; கலவரத்தை துாண்டிவிடக் கூடாது. வாஜ்பாய், ராஜிவ், நரசிம்மராவ், மன்மோகன் சிங், தேவ கவுடா போன்ற பிரதமர்களுடன் பணியாற்றி உள்ளேன். ஆனால், மோடியை போல யாரையும் நான் பார்த்ததில்லை; இப்படிப்பட்ட பிரதமர் நமக்கு தேவையே இல்லை.
டவுட் தனபாலு: பிரதமர் மோடி, எந்த ஊர்ல கலவரத்தை துாண்டி விட்டார்னு சொல்ல முடியுமா...? ஆனா, மேற்கு வங்கத்துல நீங்க எதிர்க்கட்சியா இருந்தப்ப, நந்திகிராம்ல கலவரத்தை துாண்டி விட்டது யார்னு கேட்டா, வரலாறு உங்களை தான் கை காட்டும் என்பதில், 'டவுட்'டே இல்லை!