PUBLISHED ON : ஜூலை 10, 2024 12:00 AM

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: விக்கிர வாண்டி இடைத் தேர்தலை தே.மு.தி.க.,வினர் புறக்கணிப்பர். தமிழகத்தில் எல்லா தேர்தலிலும் தே.மு.தி.க., போட்டியிட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணம், அதிகாரத்தை பயன்படுத்தி, அராஜகம் செய்து தி.மு.க., வெற்றி பெற்றது. இதை, தேர்தல் ஆணையத்திடம் ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாததால், இடைத்தேர்தலில் தே.மு.தி.க., போட்டியிடவில்லை.
டவுட் தனபாலு: பா.ஜ.,விடம் அந்த தொகுதியை கேட்டு வாங்கி, பா.ம.க., போட்டியிடுவது போல, நீங்களும் உங்க கூட்டணி கட்சியான அ.தி.மு.க.,விடம் அந்த தொகுதியை கேட்டு வாங்கியிருக்கலாமே... உங்க கட்சியின் பலவீனம் பத்தி பேசாமல், தேர்தல் கமிஷன் மீது பழி போடுவது முறையா என்ற, 'டவுட்' வருதே!
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: தமிழக காவல் துறையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனராக அருண், கூடுதல் சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யாக டேவிட்சன் ஆசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளனர். இனி வரும் காலங்களில், அரசுக்கு எவ்விதமான கெட்ட பெயரும் ஏற்படாமல், காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டவுட் தனபாலு: 'காவல் துறை சரியா செயல்படாம இருப்பது, எங்களுக்கு தான் தர்மசங்கடமா இருக்கு... சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள்ல, ஆளுங்கட்சியை குத்தம், குறை சொல்ல முடியல... அதனால, எங்களுக்காகவாவது கொஞ்சம்மெனக்கெட்டு வேலை பாருங்க'ன்னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: அ.தி.மு.க.,வுக்கும், ஜெயலலிதாவுக்கும் எந்த அளவுக்கு விசுவாசமாக இருந்தேன் என்பதை, ஜெயலலிதா பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார். எனவே, அதை பற்றி பேச, பத்து தோல்வி பழனிசாமிக்கு தகுதியில்லை. சுயநலத்துக்காக பல துரோகங்களை செய்த பழனிசாமி, என்னுடைய விசுவாசம் குறித்து பேச அருகதையற்றவர்.
டவுட் தனபாலு: சுயநலத்துக்காக பழனிசாமி மட்டும் தான் துரோகம் செய்தாரா...? ஜெ., மறைவுக்கு பின், உங்களிடம் முதல்வர் பதவியை சசிகலா தரப்பு திருப்பி கேட்டப்ப, ஜெ., சமாதியில் தர்மயுத்தம் நடத்தி, பதவி தந்தவங்களுக்கு எதிரா திரும்பியது எல்லாம் துரோக பட்டியல்ல வராதா என்ற, 'டவுட்' வருதே!