PUBLISHED ON : பிப் 28, 2025 12:00 AM

 தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்: தமிழகம், மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு பின், தேர்தல் வியூகம் செய்யாமல் இருந்தேன். தமிழகம் வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதை போல், ஊழலிலும் அவ்வாறே உள்ளது. லஞ்சம், வாரிசு அரசியல் இல்லையெனில், தமிழகம் மேலும் வளரும். தமிழக வெற்றிக் கழக வெற்றி விழாவில், தமிழில் பேசுவேன்.
டவுட் தனபாலு: 'கடந்த 2021 சட்ட சபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் வகுத்து தந்து லஞ்சம், வாரிசு அரசியலுக்கு வழிவகுத்துட்டேன்... அதுக்கு பிராயசித்தம் தேடவே, தமிழக வெற்றிக் கழகத்துக்கு வியூகம் வகுக்க போறேன்'னு தமிழக மக்களிடம் பாவமன்னிப்பு கேட்குறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி: கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் போராட்டங்கள் நடத்துவது இயல்பு தான். அந்த வகையில் தான், தங்களுடைய கோரிக்கைகளுக்காக தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டனர். அவர்களுக்கான கோரிக்கைகள் குறித்து, ஜாக்டோ - ஜியோ அமைப்பினருடன் தமிழக அரசு பேச்சு நடத்தி, பிரச்னைகளை தீர்க்க வேண்டும்..
டவுட் தனபாலு: அது சரி... 'அரசு ஊழியர்கள் கோபம் ஆளுங்கட்சி மீது தான் என்றாலும், அவங்களுக்கு கொடுக்கிற அடி, அவங்க முதுகுல சவாரி செய்ற எங்களையும் சேர்த்து தான் பாதிக்கும்... அதனால, சட்டுபுட்டுன்னு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர்ற வழியை பாருங்க'ன்னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: ஒரு விதை வளருகிறது என சொன்னால், அங்கு சத்தமிருக்காது. ஆனால், மரம் விழுகிறது என்றால் பலத்த சத்தம் இருக்கும். சத்தம் எங்கு இருக்கிறது என்பது எல்லாருக்கும் நன்றாக தெரியும். அது அழிவு பாதையை நோக்கி செல்கிறது. வீழ்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. அது ஒரு மூழ்கும் கப்பல். அந்த கப்பலில் யாரும் ஏறமாட்டார்கள்.
டவுட் தனபாலு: பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வை பார்த்து, 'மூழ்கும் கப்பல், அழிவு பாதையை நோக்கி போகிறது' என்றெல்லாம் சாபம் விடுறீங்களே... கோடிக்கணக்கான தொண்டர்கள் ரத்தமும், வியர்வையும் சிந்தி உருவாக்கியகட்சியை வசைபாடும் உங்களை, எம்.ஜி.ஆர்., - ஜெ.,யின் நிஜமான விசுவாசிகள் ஏத்துக்குவது, 'டவுட்'தான்!

