PUBLISHED ON : செப் 09, 2011 12:00 AM

தி.மு.க., தலைவர் கருணாநிதி: கட்சிக்கு வந்த சோதனைகளை எல்லாம், தாங்கி பழக்கப்பட்ட இயக்கம், இன்றைக்கும் தாங்கிக்கொள்ளக் கூடிய வலிமை வாய்ந்த இயக்கம் இந்த இயக்கம் என்பதை, நம்முடைய அன்பழகன் இங்கே சுட்டிக்காட்டினார்.
டவுட் தனபாலு: அவருக்கென்ன...
'எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்'னு சொல்லிட்டுப் போயிடுவாரு... அடி வாங்குற, 'மாஜி'க்களும், எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறதாம்...!
தமிழக போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி: கடந்த ஆட்சியில் ஆளுங்கட்சியினர், பினாமிகள் பெயரில் 20, 30 டாடா மேஜிக் வாங்கி, தொழிலாளர்கள் உழைப்பை உறிஞ்சிக் கொண்டிருந்தனர். திண்டுக்கல் நகரத்தில் டாடா மேஜிக், ஷேர் ஆட்டோக்கள் வேலை நிறுத்தம் நடத்தியபோது, போக்குவரத்துத் துறைக்கு கூடுதலாக இரண்டு லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.
டவுட் தனபாலு: இதுல இருந்து என்ன தெரியுது...? போக்குவரத்துத் துறை கண்ணு முழிச்சுப் பார்த்து, பஸ் வசதி செய்ய வேண்டிய இடம் நிறைய இருக்குன்னு தெரியுதா...? அதை முதல்ல செஞ்சுடுங்க... பினாமிகள், தன்னால ஒழிஞ்சுடுவாங்க...!
தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்: மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசு, பயங்கரவாதிகளுக்கு துணை நிற்பது போல தெரிகிறது. அப்படி இல்லை என்றால், வாஜ்பாய் கொண்டு வந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமான, 'பொடா'வை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
டவுட் தனபாலு: சும்மா மத்திய அரசை குறை சொல்லிட்டே இருக்காதீங்க... அவங்க, என்னிக்குமே பேச்சை மாத்தினதில்லை... 'பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்'னு, முதல் குண்டு வெடிப்புல இருந்தே சொல்லிட்டு இருக்காங்க... அடுத்த குண்டு வெடிப்புக்கும் அதையே தான் சொல்வாங்கன்னா, பார்த்துக்கோங்க...!

