PUBLISHED ON : நவ 11, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: வட கிழக்கு பருவ மழைக்கு, தமிழகத்தில் சிலர் பலியாகி உள்ளதாக செய்திகள் வருகின்றன. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தோல்வி என்பதையே, இது காட்டுகிறது. துறை வாரியாக ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் நடத்துகிறார். ஆய்வு கூட்டத்தால் மட்டும் மக்களை காப்பாற்ற முடியாது; களப்பணியால் தான் காக்க முடியும்.
டவுட் தனபாலு: கடந்த 2015 டிசம்பரில், சென்னையில் பெருவெள்ளம் வந்து, பலர் உயிரிழந்தாங்களே... அப்ப, ஜெ., தலைமையில் இருந்த, அ.தி.மு.க., அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், களப்பணிகள்னு எதையுமே செய்யலையா என்ற, 'டவுட்' வருதே!
தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி: 'வரும், 2026ல் ஆட்சியை பிடிக்கலாம்' என, முன்னாள் முதல்வர் பழனிசாமி காணுவது பகல் கனவு. 2026 தேர்தலிலும், எங்களின் கூட்டணி தான் வெல்லும். ஆனால், பா.ம.க., தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அதன் தலைவர் அன்புமணியும், பழனிசாமி போல பகல் கனவு காணுகிறார். எங்களுடன் கூட்டணியில் உள்ள யாரும், யார் சதி வலையிலும் சிக்க மாட்டார்கள். நிச்சயமாக, வி.சி., தலைவர் திருமாவளவனும் கூட்டணியில் நீடிப்பார்.
டவுட் தனபாலு: 'ஆட்சியில் பங்கு வேணும்'னு குரல் கொடுக்கிறதுல, முதல் ஆளே திருமாவளவன் தான்... அதனால, கூட்டணி ஆட்சிக்கு நீங்க இப்பவே இறங்கி வந்தால் தான், அவரை, 2026 வரை இழுத்து பிடிக்க முடியும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: ஒன்றியம், பேரூராட்சி அளவில் உள்ள, த.வெ.க., நிர்வாகிகளை, தி.மு.க., ஒன்றிய மற்றும் பேரூராட்சி செயலர்கள் ரகசியமாக சந்தித்து வருகின்றனர்; விஜய் கட்சி துவக்கியதற்கு வாழ்த்து கூறுகின்றனர். பின், தீபாவளி பரிசு என்ற பெயரில், இனிப்புகள், பரிசு, பணம் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். த.வெ.க., நிர்வாகிகள் பலரும் வசதி குறைந்தவர்கள் என்பதால், தி.மு.க.,வினரின் வலையில் விழுகின்றனர். இதன் வாயிலாக, ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படாதபடி, அவர்கள் வளைக்கப்படுகின்றனர்.
டவுட் தனபாலு: வழக்கமா, தேர்தல் நேரத்தில் தான் இந்த மாதிரி, 'வளைப்பு' வேலைகளை, தி.மு.க.,வினர் கையில எடுப்பாங்க... இப்பவே, இதற்கு விஜய் தடுப்பணை போடலை என்றால், தேர்தல் நேரத்தில் விஜயும், அவரது கட்சியின் பொதுச் செயலர் ஆனந்த் மட்டும் தான், அவரின் கட்சியில எஞ்சியிருப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!