PUBLISHED ON : நவ 20, 2024 12:00 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: விவசாயிகளுக்கு உரிய முக்கியத்துவத்தை, மத்திய, மாநில அரசுகள் வழங்கவில்லை. நெல், கரும்பு உள்ளிட்ட விளை பொருட்களுக்கு, உரிய விலை கிடைப்பதில்லை. விவசாயிகளின் துயரங்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இவற்றை மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்துக் கூற, பா.ம.க.,வின் தமிழக உழவர் பேரியக்க மாநில மாநாடு, டிச., 21ல் திருவண்ணாமலையில் நடக்க உள்ளது. கட்சி வேறுபாடுகளை கடந்து, விவசாயிகள் பங்கேற்க வேண்டும்.
டவுட் தனபாலு: தமிழகம் முழுக்கவே விவசாயிகள் இருந்தும், உங்க கட்சி வலுவா இருக்கிற திருவண்ணாமலையில ஏன் மாநாடு நடத்துறீங்க... மதுரை, திருச்சியில மாநாடு நடத்தி, கூட்டம் திரளாமபோயிட்டா, பா.ம.க.,வின் உண்மையான பலம் அம்பலமாகிடும்னு தயங்குறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
டில்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட்: டில்லியின் வளர்ச்சிக்கு மத்திய அரசுடன் நல்லுறவை பேணுவது அவசியம்.அதை விடுத்து, மத்திய பா.ஜ., அரசுடன் ஆம் ஆத்மி தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது. இது, எனக்கு பிடிக்கவில்லை. அதனால், ஆம் ஆத்மியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்தேன். அமலாக்கத் துறை, சி.பி.ஐ., சோதனைக்கு பயந்து, பா.ஜ.,வில் நான் சேரவில்லை.
டவுட் தனபாலு: ஜனநாயகத்தில் எந்த கட்சிக்கும் மாறும் உரிமை எல்லாருக்கும் உண்டு... ஆனா, இதற்கு முன் உங்களிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, சி.பி.ஐ., அதிகாரிகள், இனி நீங்க இருக்கும் பக்கமாவது தலை வச்சு படுப்பாங்களா என்பது, 'டவுட்' தான்!
பத்திரிகை செய்தி: வீடுகளை காலி செய்யுமாறு, நீர்வளத் துறை நோட்டீஸ் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மதுரை, முல்லை நகர் பகுதி மக்களுக்கு, த.வெ.க., மதுரை வடக்கு மாவட்ட தலைவர்கல்லாணை தலைமையிலான கட்சியினர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். அப்பகுதி மக்களிடம், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், மொபைல் போனில் பேசினார். அப்பகுதி மக்களிடம் மனுக்களை பெற்ற நிர்வாகிகள், அதை விஜயின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.
டவுட் தனபாலு: அது சரி... சிரமப்படும் மக்களை தேடி போய், அவங்க மத்தியில உட்கார்ந்து போராடினால் தான், கட்சிக்கு ஆதரவு பெருகும்... மொபைல் போனில் கூட விஜய் பேசாமல், அவரது பொதுச்செயலரை விட்டு பேச வைக்கிறார் என்றால், 'ஏசி' அறையை விட்டு விஜய் வெளியில வரவே மாட்டாரா என்ற, 'டவுட்' தான் வருது!

