PUBLISHED ON : மார் 06, 2024 12:00 AM

தி.மு.க.,வைச் சேர்ந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன்: பிரதமர் மோடிக்கு எந்த
நேரமும் தி.மு.க.,வை பற்றியும், முதல்வர் ஸ்டாலின் பற்றியும் தான் சிந்தனை.
ஹிட்லரை தோற்கடித்தவர் ரஷ்ய தலைவர் ஸ்டாலின். மோடியை தோற்கடிக்க, நம்
ஸ்டாலின் பிறந்துள்ளார்.
டவுட் தனபாலு: மோடியை தோற்கடிக்கும்
அளவுக்கு சக்தி படைத்தவர் ஸ்டாலின் என்று சொல்கிறாரே... பிரதமர் பதவிக்கு
தகுதியானவர் தன் தலைவர் மட்டும் தான்னு, 'இண்டியா' கூட்டணி கட்சிகளுக்கு
நாசுக்கா சுட்டிக்காட்டுறாரோ என்ற, 'டவுட்' தான் வருது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ரமணா: ஆட்சி அதிகாரத்தை தி.மு.க.,வினர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். ஊழல் செய்வதையே நோக்கமாக வைத்துள்ளனர். தற்போது, தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து உள்ளது. போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தி.மு.க.,வினர் தொடர்பில் உள்ளனர்.
டவுட் தனபாலு: ஜாபர் சாதிக் சம்பவத்தை தான் சுட்டிக்காட்டுறீங்க என்பது நன்றாக தெரிகிறது... ஆனா, அ.தி.மு.க., ஆட்சியில நடந்த, 'குட்கா' ஊழல்ல உங்க பெயரும் அடிபட்டுச்சே... குட்கா என்பது உடலுக்கு நன்மை தரும் பண்டம்னு நினைச்சுட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன்: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை போலீஸ் அதிகாரியாக இருந்தவர். ஆனால், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை, தன் கட்சியில் சேர்க்கும் வேலையை செய்து வருகிறார். ஜனநாயக போர்வையில் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் மோடி.
டவுட் தனபாலு: சமூக விரோதிகளை கட்சியில சேர்க்கிறதை பத்தி நீங்க பேசலாமா...? பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு போதை மருந்து கடத்தல் சாம்ராஜ்யத்தையே நடத்திய ஜாபர் சாதிக்கை இத்தனை நாட்களா கட்சியில வச்சிருந்தவங்க, மற்ற கட்சியை குற்றம் சாட்டலாமா என்ற, 'டவுட்' வருதே!

