PUBLISHED ON : மார் 21, 2025 12:00 AM

அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை: அ.தி.மு.க., ஆட்சியில் பழனிசாமி முதல்வராக இருந்தபோது, 11 மருத்துவக் கல்லுாரிகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், தி.மு.க., ஆட்சி காலத்தில், ஒரு மருத்துவக் கல்லுாரி கூட கொண்டு வரப்படவில்லை; அதற்கான முயற்சியும் எடுக்கப்படவில்லை. மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதில், தி.மு.க., அரசு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது.
டவுட் தனபாலு: தமிழகத்துல இப்ப இருக்கிற அரசு மருத்துவக் கல்லுாரிகள்லயே போதுமான பேராசிரியர்கள், சிறப்பு மருத்துவர்கள் இல்லாம திண்டாடிட்டு இருக்காங்க... இதுல, புதுசா மருத்துவக் கல்லுாரிகளை திறந்து என்னத்தை பண்றதுன்னு யோசிச்சு தான், நாலு வருஷமா கம்முன்னு இருந்துட்டாங்களோ என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?
காங்., முன்னாள் தலைவர் சோனியா: மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் வேலை நாட்களின் எண்ணிக்கையை, 100ல் இருந்து, 150 ஆக அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டத்துக்கு போதுமான நிதியை ஒதுக்கி, குறைந்தபட்ச ஊதியமாக, 400 ரூபாய் வழங்க வேண்டும்.
டவுட் தனபாலு: இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி, 20 வருஷமாகிடுச்சு... ஆனா, இந்தியாவுல பெரிய அளவுல எந்த கிராமங்கள்லயும் அடிப்படை வசதிகள் வந்த மாதிரி தெரியலை... திட்டத்துல நிறைய ஊழலும், முறைகேடும் தான் நடக்குதுன்னு பல ஆய்வுகள் சொல்லுது... உங்க கோரிக்கை, ஊழலுக்கு உரம் போடும் வகையில் இருக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோருக்கு, 80 வயது நிறைந்ததும், 20 சதவீதம் உயர்த்தி வழங்கப்படுகிறது. இதை மாற்றி, 70 வயது நிறைவடையும்போது 10 சதவீதம், 80 வயது நிறைவடையும்போது 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், தி.மு.க., அரசு அதை செய்யவில்லை.
டவுட் தனபாலு: என்னமோ, இந்த ஒரு வாக்குறுதியை மட்டும் செய்யாதது மாதிரி அலுத்துக்கிறாரே... அரசு வேலையில் இருப்பவங்களது கோரிக்கைகளையே நிறைவேற்றலை... ஓய்வு பெற்று வீட்டுக்கு போனவங்க கோரிக்கையை எல்லாம், இந்த ஆட்சி முடியும் முன்பே நிறைவேற்றுவது, 'டவுட்' தான்!