PUBLISHED ON : மார் 22, 2025 12:00 AM

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப தலைவியருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உரிமை தொகை, 1,000த்தில் இருந்து, 2,500 ரூபாயாக உயர்த்தியது போல, மஞ்சள் அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவியருக்கும் வழங்க வேண்டும் என, சட்டசபையில் கோரிக்கை எழுப்பப்பட்டது. இதன்படி, மஞ்சள் கார்டு வைத்திருக்கும் குடும்ப தலைவியருக்கும் மாதந்தோறும், 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும்.
டவுட் தனபாலு: உங்க மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையே 14 லட்சம் தான்... அதிலும் குடும்ப தலைவியர்னு பார்த்தா 2 - 3 லட்சம் பேர் தான் இருப்பாங்க... போதாக்குறைக்கு, மத்திய அரசும் தாராளமா உதவி பண்ணும்... அடுத்த வருஷம் வர்ற தேர்தலை மனசுல வச்சு அள்ளி விட்டு, தமிழக ஆட்சியாளர்களை தர்மசங்கடத்துல தள்ளிட்டீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!
பத்திரிகை செய்தி: நம் நாட்டு எம்.எல்.ஏ.,க்களில் மிகப் பெரிய பணக்காரராக, 3,400 கோடி ரூபாய் சொத்துக்களுடன் மஹாராஷ்டிராவின் பா.ஜ., - எம்.எல்.ஏ., பராக் ஷா முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தை, 1,413 கோடி ரூபாய் சொத்துக்களுடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பிடித்துள்ளார்.
டவுட் தனபாலு: நாட்டிலும் இந்த ரெண்டு கட்சிகள் தான் முதல் மற்றும் ரெண்டாவது இடத்துல இருக்கு... சொத்து பட்டியல்லயும் அதே மாதிரி இருக்காங்களே... என்ன தான் மாநில உரிமைகள் பற்றி வாய் வலிக்க பேசினாலும், சொத்து சேர்ப்பதுல, மாநில கட்சிகள் இவங்க பக்கத்துல கூட போக முடியுமா என்பது, 'டவுட்' தான்!
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி: தமிழகத்தில் மூன்று கோவில்களில், நெரிசலால் பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். கோவிலில் நுழைவது முதல் தரிசனம், அர்ச்சனை, அபிஷேகம் என, அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்கின்றனர். இவ்வளவு வசூல் செய்தும், பக்தர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. ஒரு இணை ஆணையருக்கு, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுக்கின்றனர். பக்தர்களின் உண்டியல் பணத்தில் பல கோடி ரூபாய் சம்பளத்திற்கே போகிறது. கோவில்களில் ஆம்புலன்ஸ், டாக்டர் வசதி தேவை.
டவுட் தனபாலு: இணை ஆணையருக்கு, 2 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்க தெரிஞ்ச அரசுக்கு, ஒரு டாக்டரை நியமிச்சு 1 லட்சம் ரூபாய் சம்பளம் தர முடியாதா...? கோவில் உண்டியல்கள்ல பணம் கொட்டுது... ஆனா, ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லை என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை!