PUBLISHED ON : ஏப் 21, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: பொன்முடியின் இழிவான பேச்சை கேட்ட பிறகும், முதல்வர் ஸ்டாலின் அவரை எப்படி சகித்துக் கொள்கிறார் என்பது வியப்பாக உள்ளது. தமிழக மக்கள் கொதித்து போய் உள்ளனர். குற்றம் செய்வது மட்டுமல்ல, குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பதும் குற்றம் தான். பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நீக்கியிருக்க வேண்டும்.
டவுட் தனபாலு: ஊழல் குற்றச் சாட்டுல சிக்கி, ஜெயிலுக்கும் போயிட்டு ஜாமின்ல வந்த செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்குறாரு... பொதுமேடையில் ஆபாசமாக பேசிய பொன்முடி பதவியை பறிப்பதில் தயக்கம் காட்டுறாரு... 'தேர்தலுக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்கே... தமிழக மக்களுக்கு ஞாபக மறதி அதிகம்'னு முதல்வர் நினைக்கிறாரோ என்ற, 'டவுட்' தான் வருது!
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கூட்டணிக்கு எல்லாரும் அழைக்கின்றனர்; அதற்கு நன்றி. ஆனால், எங்களுடைய பயணம், எங்களது கால்களை நம்பி தான் இருக்கிறது. அடுத்தவர் கால்களை, தோள்களை நம்பி, நாங்கள் பயணத்தை துவக்கினால், எங்களது இலக்கை நோக்கி அப்பயணம் போகாது. பிறர் தோள் மீது ஏறி நின்று, நான் உயரமானவன் என்று காட்டுவதைவிட, தனித்து நின்று, உண்மையான உயரத்தை காட்டுவதே மேலானது.
டவுட் தனபாலு: உங்க கொள்கை பாராட்டுக்குரியது தான்... ஆனா, எல்லாரும் பிறர் தோள் மீது நின்று, உயரமாக தங்களை காட்டிக்கிறப்ப, நீங்க சொந்த கால்ல நின்றாலும், ரொம்பவே குள்ளமாக தான் தெரிவீங்க... மற்றவங்க உயரம் அதிகரிக்க அதிகரிக்க, ஒரு கட்டத்தில், நீங்க காணாமலே போயிடுவீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ஜ., செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா: ஊழலை ஒழித்து, ஊழல் செய்தவர்களை சிறைக்கு அனுப்புவதில் பிரதமர் மோடியின் அரசு உறுதியாக உள்ளது. சோனியா குடும்பத்தினர் ஊழல் செய்து, பணத்தை குவித்து வைத்திருந்தால், ஒவ்வொரு பைசாவும் அவர்களிடமிருந்து மீட்கப்படும்.
டவுட் தனபாலு: பிரதமர் மோடி, மத்தியில் ஆட்சிக்கு வந்து, 11 வருஷமாகிடுச்சு... சோனியா குடும்பத்தினர் ஊழல் செய்திருந்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்க ஏன் இவ்வளவு தாமதம்... வக்ப் விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் தலையீடு மாதிரி, மத்திய அரசுக்கு எதிரான விஷயங்களை திசை திருப்பவே, சோனியா குடும்பம் மீதான வழக்குகளை வேகப்படுத்துறதும், அப்புறம் ஆறப் போடுறதுமா அரசியல் பண்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

