PUBLISHED ON : ஏப் 26, 2025 12:00 AM

தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி: நேற்று கட்சி துவங்கியவர்கள் எல்லாம், 'நாளைய முதல்வர்' என போஸ்டர் அடிக்கும்போது, நாம் துணை முதல்வர் பதவி கேட்டு போஸ்டர் அடிப்பதில் என்ன தவறு? துணை முதல்வர் பதவி செல்வப்பெருந்தகைக்கு வேண்டாம் என்றால், அப்பதவியை எனக்கு தாருங்கள்; நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி கேட்பதற்கு யாரும் பயப்பட வேண்டாம்; தைரியமாக கேட்க வேண்டும்.
டவுட் தனபாலு: என்னமோ, துணை முதல்வர் பதவியை தங்க தாம்பாளத்தில் வைத்து காங்கிரசுக்கு தி.மு.க., நீட்டுவது போலவும், அதை செல்வப்பெருந்தகை மறுப்பது போலவும் பேசுறீங்களே... ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் எல்லாம் கேட்டீங்க என்றால், 'அதை யார் தர்றாங்களோ, அங்கேயே போயிடுங்க'ன்னு தி.மு.க., கதவை சாத்திடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: அரசு ஊழியர்களை தமிழக அரசு ஏமாற்றி விட்டதாக, த.வெ.க., தலைவர் விஜய், வீட்டுக்குள் இருந்தபடியே எதையும் சொல்லக் கூடாது. மக்கள் பிரச்னை என்றால், அரசியல்வாதியாக அதைத் தீர்க்க அவரும் முன்வர வேண்டும்.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... விஜய், வீட்டை விட்டு வெளியில் வந்து, அரசு ஊழியர்களை சந்தித்துப் பேசி, அவங்களுக்கு நீங்க எப்படி எல்லாம் வாக்குறுதிகள் தந்து ஏமாத்துனீங்க என்பதை தெளிவாகக் கேட்டறிந்து, அதை, தான் எப்படி தீர்த்து வைப்பேன்னு விளக்காம, பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுறது சரியல்ல என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: காஷ்மீரில், பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறாமல், வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன், பா.ஜ., அரசு 370வது சட்டப்பிரிவை நீக்கியதை குறை சொல்கிறார். ஒட்டுமொத்த தேசமும் பயங்கரவாதிகளுக்கு எதிராக நிற்கும்போது, 'இண்டியா' கூட்டணியும், அதன் பங்காளியான திருமாவளவனும், 370வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு மட்டுமே எதிராக உள்ளனர்.
டவுட் தனபாலு: காஷ்மீரில், 370வது சட்டப்பிரிவை நீக்குறதுக்கு முன்னாடி, அம்மாநிலம் அமைதிப் பூங்காவாக இருந்தது போலவும், 370வது பிரிவை நீக்கிய பின்தான் வன்முறைகள் நடப்பது மாதிரியும் திருமாவளவன் சொல்றாரே... மத்திய பா.ஜ., அரசு மீது குற்றம்சாட்ட கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவறவிடக் கூடாதுன்னு திருமாவளவன் நினைக்கிறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!

