PUBLISHED ON : ஜூன் 11, 2025 12:00 AM

தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு: எந்த ஒரு கட்சியும், இன்னொரு கட்சியை அழிக்க முடியாது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் ஜனநாயகத்திற்கு தேவை. அமித் ஷா, மோடி ஆகியோரால் திராவிட கட்சிகளை ஒரு நாளும் அழிக்க முடியாது. சுதந்திரத்திற்காக பாடுபட்ட காங்., கட்சியையும் அவர்களால் அழிக்க முடியாது.
டவுட் தனபாலு: உண்மை தான்... தமிழகத்தில் காங்., ஆட்சிக்கு முடிவு கட்டிய திராவிட கட்சிக்கு முட்டுக்கொடுக்கும் வேலையை மட்டுமே முழு நேரமா பார்த்துக்கிட்டு இருக்கற உங்களை மாதிரி தலைவர்களே, காங்கிரஸ் கட்சியை காலியாக்கிடுவீங்க என்பதில் 'டவுட்'டே இல்லை!
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: தே.மு.தி.க., ஏற்கனவே சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டுள்ளது. வரும் காலங்களில் தனித்து போட்டியிடுவது குறித்து காலம் தான் பதில் சொல்லும். தனித்து போட்டியிடுவது பெரிய விஷயம் இல்லை. 2026 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., வெற்றி பெற்று, பெரிய பலத்துடன் சட்டசபைக்கு செல்ல வேண்டும்; இது தான் முக்கியம். தே.மு.தி.க.,வின் ஓட்டு வங்கி குறையவில்லை; அப்படியே தான் உள்ளது.
டவுட் தனபாலு: விஜயகாந்த் இருந்த போதே, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, அவர் ஒருவரால் மட்டுமே ஜெயிக்க முடிஞ்சது... இப்ப இருக்கற சூழலில் இனி தனித்தெல்லாம் நீங்க போட்டியிட்டா, அடுத்தடுத்த தேர்தலுக்கு தே.மு.தி.க.,வை தமிழகத்தில் பூதக்கண்ணாடி வைத்து தான் தேடணும் என்பதில் 'டவுட்'டே இல்லை!
தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி: தி.மு.க., ஆட்சியில் 2000ம் ஆண்டில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. அப்போது, இந்த இடம் பூந்தோட்டம் ஏரியாக இருந்தது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து பயிரிட்டிருந்தனர். வேறு சிலர், வீடு, கடை கட்டி இருந்தனர். நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில், அந்த இடத்தில் பஸ் நிலையம் கட்டினோம்.
டவுட் தனபாலு: வீடு, கடை கட்டுறது ஆக்கிரமிப்புன்னா, ஏரியில் பஸ் நிலையம் கட்டுறதுக்கு பெயர் என்னவாம்... இந்த மாதிரி ஏடாகூடமா பேசி, முதல்வர் ஸ்டாலினை எரிச்சல்படுத்திக்கிட்டே இருந்தீங்கன்னா, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் உங்களுக்கு 'சீட்' கிடைப்பது 'டவுட்' தான்!