PUBLISHED ON : மார் 05, 2026 03:05 AM

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்: தமிழ் இனத்தின் குரல் டில்லிக்கு கேட்க துவங்கி விட்டது. இனி, தெற்கு தேயவே தேயாது; தேயவும் விட மாட்டோம். தமிழக முதல்வர் ஸ்டாலினை தேசிய அரசியலில் களம் காண வைக்க போகிறோம் என்பதை மறந்து விடாதீர். திராவிடர்களின் நாயகன் ஸ்டாலின். அவருக்கு தோள் கொடுக்க வேண்டியது, தமிழனின், இந்தியனின் கடமை.
டவுட் தனபாலு: ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு போய் பிரதமர் ஆகிட்டால், ராஜ்யசபா எம்.பி.,யா இருக்கும் நீங்க, அப்படியே மத்திய அமைச்சர் ஆகிடலாம்னு கனவு காணுறீங் களோ என்ற, 'டவுட்'தான் வருது.. . அதோட, தி.மு.க.,வினருக்கு கூட தோணாத இந்த மாதிரி ஐடியாவை எல்லாம், ரூம் போட்டு யோசிப்பீங்களோ என்ற, 'டவுட்'டும் சேர்ந்தே வருது!
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு விரைவில் துவங்கும். பா.ஜ.,வின் நிலைப்பாட்டை ஏற்கனவே கூறி இருக்கிறோம். தி.மு.க., ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். தே.ஜ., கூட்டணி ஆட்சியில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தான் முதல்வர்.
டவுட் தனபாலு: பழனிசாமி தான் முதல்வர் என்பதில் யாருக்கும், 'டவுட்' இல்லை... ஆனாலும், 'தே.ஜ., கூட்டணி ஆட்சி'ன்னு ஒரு கொக்கியை போடுறீங்களே... அதனால, 'துணை முதல்வர் மற்றும் முக்கிய துறைகளின் அமைச்சர் பதவிகளில் பா.ஜ.,வினர் அமர்வாங்க' என்பதை சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அறிக்கை: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவை, தி.மு.க., அரசு செயல்படுத்தவில்லை. இது தொடர்பான அவமதிப்பு வழக்கில், நீதிமன்றத்தில், மதுரை கலெக்டர் பொது மன்னிப்பு கோரியுள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றாமல், வேண்டுமென்றே தி.மு.க., குழப்ப அரசியல் செய்தது. தன் அற்ப அரசியலுக்கு, அதிகாரிகளை பகடைக்காய் ஆக்கியிருப்பது வெட்கக்கேடானது.
டவுட் தனபாலு: பழனிசாமி தலைமையில் நடந்த அ.தி.மு.க., ஆட்சியில், துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரா நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 பேர் கொல்லப்பட்டாங்களே... அன்றைய ஆட்சியாளர்கள் யாரும் அந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்கலையே... அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' பண்ணி, கதையை முடிச்சதை அ.தி.மு.க.,வினர் மறந்துட்டாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

