PUBLISHED ON : மார் 28, 2026 03:31 AM

தமிழக முதல்வர் ஸ்டாலின்: தி.மு.க., கூட்டணியில், புதிய கட்சிகள் இணைந்ததால், உரிய அளவில் தொகுதிகளை பங்கிட வேண்டிய சூழலும் தேவையும் இருந்தது. நம்முடன் தொடர்ந்து பயணிக்கும், வி.சி., - இந்திய கம்யூ., - மா.கம்யூ., - ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களுடனும் ஆலோசித்தே, தொகுதி பங்கீடு ஒப்பந்தங்கள் நிறைவேறின. 'கூட்டணியின் வெற்றியே பெரிது' என்பதை கூறி, ம.நீ.ம., தலைவர் கமல் வெளியிட்ட அறிக்கையை வரவேற்கிறேன்.
டவுட் தனபாலு: கடந்த, 2024 லோக்சபா தேர்தலுக்கு மூணு சீட்கள் கேட்ட கமலை, ராஜ்யசபா எம்.பி.,யாக்கி, 'சட்டசபை தேர்தலில் சீட் தர்றோம்'னு வாக்குறுதி கொடுத்தீங்களே... 2021 சட்டசபை தேர்தலில், மக்களுக்கு வாக்குறுதிகள் தந்து ஏமாற்றியது போல, கமலையும் ஏமாத்திட்டீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்: கடந்த ஐந்தாண்டுகளாக, த.வா.க., நிர்வாகிகளை, தி.மு.க., அரசு எப்படி கையாண்டது என்பது, அனைவருக்கும் தெரியும். இந்த தேர்தலில், பண்ருட்டி தொகுதியில் நான் போட்டியிடவில்லை. கட்சி தொண்டர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறேன். பொது சின்னம் இல்லை என்றாலும், கட்சி தொண்டர்கள், சுயபரிசோதனைக்காக, சுயேச்சையாக போட்டியிடுவர்.
டவுட் தனபாலு: அது சரி... பலமான கூட்டணியில் இருந்து, உங்களால எம்.எல்.ஏ.,வாக முடியும் என்றால் மட்டும் தான் தேர்தலில் நிற்பீங்களோ... சுயபரிசோதனை என்ற பெயர்ல, உங்க தொண்டர்களை களத்தில் தள்ளிவிட்டு, அவங்க, 'டிபாசிட்' தொகைக்கு வேட்டு வைக்க பார்க்கிறீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!
பத்திரிகை செய்தி: அ.தி.மு.க., கூட்டணி தொகுதி பங்கீட்டில், அமைச்சர் சிவசங்கரின் குன்னம் தொகுதி, இந்திய ஜனநாயக கட்சிக்கும்; சக்கரபாணியின் ஒட்டன்சத்திரம், முத்துசாமியின் ஈரோடு மேற்கு, காந்தியின் ராணிப்பேட்டை ஆகிய தொகுதிகள் த.மா.கா.,வுக்கும்; அமைச்சர்கள் சுப்பிரமணியனின் சைதாப்பேட்டை, டி.ஆர்.பி.ராஜாவின் மன்னார்குடி ஆகியவை அ.ம.மு.க.,வுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல, அமைச்சர்கள் பெரிய கருப்பனின் திருப்பத்துார், அனிதா ராதாகிருஷ்ணனின் திருச்செந்துார், மனோ தங்கராஜின் பத்மநாபபுரம், நாசரின் ஆவடி, வேலுவின் திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளும், சபாநாயகர் அப்பாவுவின் ராதாபுரம் தொகுதியு ம் பா.ஜ.,வுக்கு தரப்பட்டுள்ளன.
டவுட் தனபாலு: அசைக்க முடியாத பணம் மற்றும் படை பலத்துடன் இருக்கும் அமைச்சர்களுக்கு எதிராக, தன் கட்சியினரை நிறுத்தாம, கூட்டணி கட்சிகளுக்கு அந்த தொகுதிகளை தள்ளி விட்டிருக்காரே... இதன் மூலமா, தான் ஒரு சிறந்த ராஜதந்திரி என்பதை, 'டவுட்' இல்லாம, பழனிசாமி நிரூபிச்சிட்டாரு!

