PUBLISHED ON : மே 16, 2026 12:00 AM

பா.ஜ., - எம்.எல்.ஏ., போஜராஜன்: அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தில், பலர் துரதிருஷ்டவசமாக ஏதேதோ பேசியுள்ளனர். மாண்பை மீறி, பா.ஜ.,விற்கு எதிரான பிரசாரமாக பேசி விட்டனர் என நினைக்கிறேன். ஒற்றை தாமரை மட்டுமே இருக்கிறது என்று, ஒருவர் சொன்னார். தமிழகத்தின் மீது பிரதமர் மோடி அக்கறையுடன் உள்ளார். தமிழக அரசின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவாக இருப்பார். அதனால், நம்பிக்கை தீர்மானத்தில் நாங்கள் நடுநிலை வகித்தோம்.
டவுட் தனபாலு: 'ஒற்றை தாமரை'ன்னு சொன்னதுக்கு இவ்வளவு விளக்கம் கொடுத்திருக்கீங்க... ஆனா, அந்த ஒரு தாமரையும் வாடாம இருக்கணும்னா, ஆளுங்கட்சிக்கு எதிரா ஓட்டு போடாம, 'நடுநிலை' வகிக்கிறது தான் ஒரே வழின்னு கணக்கு போட்டுட்டீங்களோன்னு, 'டவுட்' வருதே!
lll
பத்திரிகை செய்தி: சட்டசபையில், முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையிலான, 22 எம்.எல்.ஏ.,க்கள் எதிர்த்து ஓட்டு போட்டனர். ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில் வென்ற பா.ம.க.,வின் நான்கு எம்.எல்.ஏ.,க்களும், பா.ஜ.,வின் ஒரே எம்.எல்.ஏ.,வான ஊட்டி போஜராஜனும், பழனிசாமி முடிவுக்கு மாறாக நடுநிலை வகித்தனர். இதன் வாயிலாக, அ.தி.மு.க., கூட்டணியில் தாங்கள் இல்லை என, பா.ஜ.,வும், பா.ம.க.,வும் உறுதிப்படுத்தியுள்ளன.
டவுட் தனபாலு: விஜய் தலைமையிலான த.வெ.க., அரசுக்கு அ.தி.மு.க-.,வோட, 25 பேர் ஆதரவு, கூட்டணிக் கட்சியினர் 5 பேர் நடுநிலைங்கிறது, காலப்போக்குல, அ.தி.மு.க., வரிசையில உட்கார்றதுக்கு ஆள் இல்லாம, எல்லாரும் ஆளுங்கட்சியினரின், 'சீட்'கள்லயே, இடுக்கிக்கிட்டு, 'அட்ஜஸ்ட்' பண்ணி உட்கார்ந்துடுவாங் களோன்னு, 'டவுட்' வருதே!
*****************
அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் கே.பி.முனுசாமி: அ.தி.மு.க., தலைமையின் அறிவிப்பு எதுவாக இருந்தாலும், பொதுச்செயலர் ஒப்புதலுடன் தான் வெளியாகும். இப்போது சில மாவட்டங்களில், பொதுச்செயலர் பழனிசாமி பெயரை பயன்படுத்தி, கட்சி நிர்வாகிகளிடம் சிலர் கடிதம் பெறுவதாக தகவல் வந்துள்ளது. அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அறிவிக்காமல், கட்சி நிர்வாகிகள் யாரும் கடிதம் கொடுக்க வேண்டாம். அ.தி.மு.க., சட்ட திட்டங்களின்படி, பொதுச்செயலருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க, பழனிசாமிக்கு அதிகாரம் உள்ளது.
டவுட் தனபாலு: முன்னாடி, அ.ம.மு.க., உருவானப்பவும் இதே மாதிரி 'கடிதப் போர்' தான் நடந்துச்சு... இப்போ வேலுமணி ஒரு பக்கம், சி.வி.சண்முகம் ஒரு பக்கம்னு சீனியர்களே போர்க்கொடி துாக்குறதைப் பார்த்தா, 'பொதுச்செயலருக்கு அதிகாரம் இருக்கு'ன்னு நீங்க சொல்றது வெறும், 'ஆறுதல்' பேச்சு தானோன்னு, 'டவுட்' வருதே!
lll
