PUBLISHED ON : மே 29, 2026 12:46 AM

அ.தி.மு.க.,வில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ., இசக்கி சுப்பையா: அம்பாசமுத்திரம் தொகுதி மக்கள், என்னை மூன்று முறை வெற்றி பெற வைத்தனர். தொகுதி மக்கள் தான் எனக்கு முக்கியம். தொகுதி மக்களின் நலன் கருதியே என் செயல்பாடு அமைந்துள்ளது. எனக்கென தனி விருப்பு, வெறுப்பு கிடையாது. ஐந்து ஆண்டுகள் தொகுதி மக்கள் கஷ்டப்பட்டு விட்டனர். தொகுதிக்கு எதுவும் செய்ய முடியாத காரணத்தால், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளேன்.
டவுட் தனபாலு: தொகுதி மக்கள் உங்க வீட்டு முன்னாடி வந்து, 'த.வெ.க.,வில் போய் சேர்ந்தால் தான் ஆச்சு'ன்னு ஒற்றை காலில் நின்னது மாதிரி பேசுறீங்களே... அமைச்சர் பதவி ஆசைக்காக ஆளுங்கட்சியில் சேர்ந்துட்டு, தொகுதி மக்கள் மீது பழியை துாக்கி போடுவது சரியா என்ற, 'டவுட்' தான் வருது!
lll
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: முதல்வர் விஜய், தேர்தல் பிரசாரத்தின் போது மிக கடுமையாக சாடிய தி.மு.க., கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பதவிக்கு வந்தார். அ.தி.மு.க.,வில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைத்து, தன் கட்சியிலும் சேர்த்துக் கொண்டார். அந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடந்தால், மக்களின் வரிப்பணம் வீணாகும் என்பதை முதல்வர் விஜய் அறியாமல் இருப்பது, அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.
டவுட் தனபாலு: அது சரி... இன்று த.வெ.க., செய்றதை உங்க கட்சியினர் கர்நாடகா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே செய்து, ஆட்சியில் அமர்ந்தாங்களே... அங்க எல்லாம் மறுபடியும் தேர்தல் நடந்தப்ப, மக்கள் வரிப்பணம் வீணாகாம சேமிக்கப்பட்டதா என்ற, 'டவுட்' வருதே!
lll
பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகர் சரத்குமார்: பாலியல் வழக்குகளில் உடனடியாக தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கை விரைவாக நடத்த வேண்டும். பாலியல் பலாத்காரம் போன்ற வழக்குகளில் மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதே என் கருத்து. அதுவும், மக்கள் முன்னிலையில் குற்றவாளியை துாக்கிலிட்டால் தான் சரியாக இருக்கும்.
டவுட் தனபாலு: நீங்க சொல்றது நுாற்றுக்கு நுாறு சரி... ஆனா, 'இது ஜனநாயக நாடு... சர்வாதிகார நாட்டுல தான் இந்த மாதிரி எல்லாம் பண்ணுவாங்க'ன்னு சிலர் துள்ளி குதிப்பாங்க... அதே நேரம், நீங்க சொல்ற மாதிரி நாலு பேரை நடுரோட்டில் துாக்குல போட்டாலே, பாலியல் குற்றங்கள் பாதிக்கு மேல குறைஞ்சிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
