PUBLISHED ON : ஜூன் 12, 2026 12:08 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி: தொடர்ச்சியாக அதிக காலம் பதவி வகித்த பிரதமர் என்ற புதிய சாதனையை, மோடி படைத்திருக்கிறார். கடந்த, 12 ஆண்டு கால ஆட்சியில், 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டது, உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் பொதுக்கட்டமைப்புகளை ஏற்படுத்தியது என, மோடி ஆட்சிக்கு பல அடையாளங்கள் உள்ளன. அதே போல், இந்தியாவை தன்னிறைவு பெற்ற வல்லரசாக மாற்றும் முயற்சியிலும், அவர் வெற்றி பெற்று சாதிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: சரி தான்...தேர்தலுக்கு தேர்தல் மக்கள் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்வதும் ஒரு திறமை. இவ்வளவு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும், இன்னும், 'அடுத்த இலக்கு' பற்றி பேச வைக்கும் அரசியல் ஆற்றல்தான் மோடியின் தனிச்சிறப்பு என்பதில், 'டவுட்'டே இல்லை!
வி.சி.க., தலைவர் திருமாவளவன்: வி.சி.க.,வின் தேவை தெலுங்கானாவிலும் இருக்கிறது. எனவே, பத்தோடு பதினொன்றாக இல்லாமல், உண்மையான அம்பேத்கர் இயக்கமாக, தெலுங்கானாவில் வி.சி.க.,வை வளர்த்தெடுக்க வேண்டும். அங்கு, அடுத்து வரும் ஒவ்வொரு தேர்தலிலும் நாம் போட்டியிட வேண்டும். நாம் வாங்கும் ஓட்டுகள் எத்தனை என்பது பிரச்னையில்லை.
டவுட் தனபாலு: அது சரி... தமிழகத்துல, வி.சி.க.,வை வளர்த்து முடிச்சாச்சுன்னு, அடுத்து தெலுங்கானா பக்கம் பார்வையை திருப்புறீங்களா அல்லது இனி தமிழகத்தில் விஜய் கட்சியை மீறி வி.சி.க.,வை வளர்க்க முடியாதுன்னு கருதி, அந்த பக்கம் திரும்புறீங்களா என்ற, 'டவுட்' தான் வருது!
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய நிர்வாகி கோபிநாத்: மக்கள் நீதி மய்யம் கட்சியில் காஞ்சிபுரம் மண்டல செயலர், தொழில் முனைவோர் அணி மாநில செயலர் ஆகிய பொறுப்புகளில் செயல்பட்டு வந்தேன். சட்டசபை தேர்தலுக்கு பின், கட்சியின் செயல்பாடுகள் மிகவும் ஏமாற்றமளிப்பதாக உள்ளன. தொண்டர்களின் கருத்துகளை, தலைவர் கமல் அறிந்து கொள்ளாதது குறையாக உள்ளது. கட்சியின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள அதிருப்தியால், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.
டவுட் தனபாலு: அது சரி... என்னமோ சட்டசபை தேர்தலுக்கு முன்னாடி, கமல் கட்சி உயிர் துடிப்புடன் இயங்கியது மாதிரியும், இப்ப தான் துவண்டு போயிட்ட மாதிரியும் சொல்றாரே... கமல் எப்ப தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்தாரோ, அன்றே மக்கள் நீதி மய்யம் கட்சி, 'பேட்டரி' இல்லாத 'டார்ச் லைட்'டா மாறிடுச்சு என்பதில், 'டவுட்'டே இல்லை!
