PUBLISHED ON : ஜன 11, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: தமிழகத்தில், 'ஆக்டிங்' முதல்வராக உதயநிதி செயல்பட்டு வருகிறார். அனைத்து துறை அதிகாரிகள் கூட்டம் நடத்தும் அதிகாரமும், மரபும் முதல்வருக்கே உண்டு. ஆகவே, முதல்வருக்கு நிகரான அதிகார போக்கில் உதயநிதி செயல்படுவது வேடிக்கையாக உள்ளது. இப்படியெல்லாம் ஒளிந்து மறைத்து எதையும் செய்யாமல், உதயநிதியையே முதல்வராக அறிவித்து விட்டால் எந்த பிரச்னையும் இருக்காது.
டவுட் தனபாலு: நீங்க சொன்னாலும், சொல்லாவிட்டாலும் அதுதான் நடக்க போகுது... 2026 சட்டசபை தேர்தலில், தப்பி தவறி எட்டாவது அதிசயமா தி.மு.க., ஜெயித்தால், உதயநிதி தான் முதல்வர் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை: தி.மு.க.,வுக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால், தி.மு.க.,வை எளிதில் வீழ்த்தி விடலாம். கம்யூனிஸ்ட் இயக்கத்தை தி.மு.க., இரண்டாக உடைத்தது போல், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் உடைத்து விடுவரோ என்ற பயம் திருமாவளவன் மனதில் உள்ளது. அதனால் தான், தி.மு.க., விஷயத்தில் மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறார்.
டவுட் தனபாலு: அது சரி... 2011ல் உங்க கூட்டணியில் இருந்த விஜயகாந்தை வெளியில தள்ளிட்டு, அவரது கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் சிலரை இழுத்து, போட்டி தே.மு.தி.க.,வை உங்க தலைவி ஜெ., உருவாக்கியதை மறந்துட்டீங்களோ... கட்சிகளை உடைப்பது கழகங்களுக்கு கைவந்த கலை என்பதில், 'டவுட்'டே இல்லை!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: ஆட்சியில் இருப்போர் என்ன எழுதி கொடுக்கின்றனரோ, அதை அப்படியே வரி மாறாமல் கவர்னர் படிக்க வேண்டும். அது தான் கவர்னர் உரை. இது, கவர்னருக்கும் தெரியும். ஆனால், இவ்வளவு பொய்யை தன் உரை என்று சம்பிரதாயத்துக்காகக் கூட சட்டசபையில் படிக்கக் கூடாது என முடிவெடுத்து தான், சபையில் தனக்கான உரையை படிக்காமல் வெளியேறி சென்று விட்டார் கவர்னர் ரவி.
டவுட் தனபாலு: 'நான் சொல்றதை தான் எல்லாரும் கேட்கணும்... மாற்று கருத்துக்கு இடமில்லை... பிடிக்காதவங்க வெளியில போயிடுங்கன்னு சீமான் எதேச்சதிகாரமா நடந்துக்கிறார்'னு உங்க கட்சியில் இருந்து வெளியேறிய, 'தம்பி'கள் புலம்புறது நிஜமா என்ற, 'டவுட்'டுக்கு உங்களிடம் விடை இருக்கா?

