PUBLISHED ON : ஜன 16, 2025 12:00 AM

தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி: ஈரோடு கிழக்கில் கடந்த இடைத்தேர்தலில், 66,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றோம். அத்தேர்தலுக்கு பின், முதல்வர் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளதால், 1.20 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். தேர்தல் பிரசாரத்தில், வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேளுங்கள்.
டவுட் தனபாலு: எல்லா எதிர்க்கட்சிகளும் ஒதுங்கிட்டாங்க... நீங்க மட்டும் தான் களத்துல இருக்கீங்க... அதனால, 1.20 லட்சம் மட்டுமல்ல; அதை விட கூடுதலாகவே ஓட்டுகள் வாங்க முடியும்... ஆனாலும், ஆளே இல்லாத மைதானத்துல நீங்க மட்டும் ஓடி, கப் ஜெயிப்பது சாதனையா என்ற, 'டவுட்' வருதே!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு, முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் மீண்டும் மீண்டும் தவறு செய்கின்றனர். வள்ளலார், வைகுண்டர் போல ஈ.வெ.ரா., என்ன புரட்சி செய்தார்? ஆதாரத்தை பூட்டி வைத்து, 'ஆதாரத்தை தா' என்றால் எங்கே போவது? ஈ.வெ.ரா., பற்றி பேசி தேர்தலில் ஓட்டு கேட்க எந்த கட்சியாவது தயாரா?
டவுட் தனபாலு: அதானே... 'கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை... கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை பரப்புபவன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி' என்று ஈ.வெ.ரா., முழங்கினாரே... 'அவர் கூறியது 100க்கு 100 உண்மை'ன்னு சொல்லி, தேர்தலில் ஓட்டு கேட்க எந்த கட்சிக்கும் துணிச்சல் இருக்குமா என்பது, 'டவுட்' தான்!
தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு: 'கடன் வாங்கி மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ் புதல்வன், விடியல் பயணம் போன்ற திட்டங்களை மேற்கொள்கின்றனர்' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆதங்கப்பட்டு இருக்கிறார். அந்த கடனை அடைக்கும் திறனும், திறமையும் முதல்வர் ஸ்டாலினுக்கு உண்டு.
டவுட் தனபாலு: 'கடனை வாங்கவும், அடைக்கவும் முதல்வர் ஸ்டாலினுக்கு திறமை உண்டு'ன்னு சொல்றீங்களே... அப்படி என்றால், பொங்கல் பரிசு தொகை 1,000 ரூபாயையும், கடன் வாங்கி மக்களுக்கு தந்துட்டு, அதை முதல்வர் அடைக்காம இருந்தது ஏன் என்ற, 'டவுட்' எழுதே!

