ADDED : செப் 02, 2024 11:06 PM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே வாழக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மகாலட்சுமி தம்பதி மகன் தருண், 13, ஒன்பதாம் வகுப்பு படித்தார்.
கடந்த 29ம் தேதி மாலை, பள்ளி முடிந்து, இவர் தன் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகள் பவ்யாஸ்ரீ, 10, என்பவரை பைக்கில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது பைக் மீது கார் மோதியதில், தருணும், பவ்யாஸ்ரீயும் படுகாயமடைந்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கட்டனர். அங்கு, சிறுவன் மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து, தருணின் சிறுநீரகம், கல்லீரல், தோல் உள்ளிட்ட உறுப்புகள் எடுக்கப்பட்டன. இதில், சிறுநீரகம் தஞ்சாவூர் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கும், கல்லீரல் திருச்சி தனியார் மருத்துவமனைக்கும், தோல் மதுரை தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
பிறகு, உடல் உறுப்பு தானம் செய்த சிறுவனின் உடலுக்கு, மருத்துவமனையில் முதல்வர் பாலாஜிநாதன் மற்றும் மருத்துவ குழுவினர், அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.
பின், நேற்று சிறுவன் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.
