இறந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்திய தாய்
இறந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்திய தாய்
ADDED : மே 14, 2024 12:40 AM

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இறந்த மகளின் ஆசையை நிறைவேற்ற அன்னையர் தினத்தில் மகளின் கட் அவுட்டிற்கு பூப்புனித நீராட்டு விழாவை தாய் நடத்தினார்.
திருப்புவனத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி பாலகிருஷ்ணன் - ராக்கு தம்பதியினருக்கு பாண்டிச்செல்வி என்ற ஒரே ஒரு பெண் குழந்தை. சிறு வயதில் இருந்தே பாண்டிச்செல்விக்கு அலங்காரம் என்றாலே மிகவும் விருப்பம்.
உறவினர்கள், நண்பர்கள் வீட்டு பூப்புனித நீராட்டு விழாவிற்கு செல்லும் போது தாய் ராக்குவிடம் தான் பூப்பெய்தும் போது இது போன்று பிரம்மாண்டமாக விசேஷம் நடத்த வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் 8 வயது இருக்கும் போது திடீரென உடல்நல குறைவால் பாண்டிச்செல்வி உயிரிழந்தார்.
தற்போது அவரது மகளுக்கு 11 வயது ஆகும் என்றும் உயிருடன் இருந்தால் பூப்பெய்து இருப்பாள் என எண்ணி அவருக்கு பூப்புனித (சடங்கு) நீராட்டு விழா அன்னையர் தினத்தில் நடத்த திட்டமிட்டார்.
திருமண மகால் கிடைக்காததால் நேற்று மகளின் பூப்புனித நீராட்டு விழாவை விமரிசையாக நடத்தினார். மகளை போன்றே கட்அவுட் செய்து அதற்கு பட்டுச்சேலை, தங்கநகை, மாலை அணிவித்து உறவினர்களை அழைத்து விழாவை நடத்தினார். மகளின் காலடியில் அவர் பயன்படுத்திய கொலுசு உள்ளிட்டவைகளும் உறவினர்கள் கொண்டு வந்த பட்டுச்சேலை, நகை சீர் வரிசை உள்ளிட்டவைகளும் பரப்பி வைக்கப்பட்டன.
விசேஷங்களின் போது சம்பந்தப்பட்டவர்களுடன் புகைப்படம் எடுப்பது போன்று மகளின் அலங்கரிக்கப்பட்ட கட்அவுட் உடன் சேர்ந்து உறவினர்கள், ராக்கு உள்ளிட்டோர் போட்டோ எடுத்து கொண்டனர்.
