மகளிர் கட்டணமில்லா பஸ்கள் : அறிவிப்பை மறைத்ததால் ஏமாற்றம்
மகளிர் கட்டணமில்லா பஸ்கள் : அறிவிப்பை மறைத்ததால் ஏமாற்றம்
UPDATED : மார் 26, 2024 10:21 AM
ADDED : மார் 25, 2024 10:53 PM

பந்தலுார்;சமவெளி பகுதிகளில் தி.மு.க., தலைமையிலான அரசு, பெண்களுக்கு கட்டணம் இல்லா பஸ் வசதியை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செயல்படுத்தியது.
ஆனால், மலை மாவட்டமான நீலகிரியில் ஒரு சில வாரங்களுக்கு முன்னரே இந்த சலுகை துவக்கப்பட்டது.
அதில், கூடலுார் கிளையில், 3 பஸ்களில் மட்டுமே இந்த திட்டம் துவக்கப்பட்ட நிலையில், இதனை பெண்கள் அறிந்து கொள்ள ஏதுவாக முன்பக்க கண்ணாடியில், 'மகளிர் கட்டணமில்லா பஸ்,' என, எழுதப்பட்டு இருந்தது.
தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இந்த பஸ்களில் முன்பக்க அறிவிப்பு பேப்பர் மூலம் மறைக்கப்பட்டு உள்ளது. இதனால், எந்த பஸ்சில் கட்டணமில்லா பயணம் என்று தெரியாமல், பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், பஸ்களில் ஏறும் பெண்கள், 'தங்களுக்கு கட்டணமில்லா சேவை உள்ளது தானே,' என, நடத்துனர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர்
பெண்கள் கூறுகையில், 'கூடலுார் பகுதியில் அரசு பெயரளவுக்கு, இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. தற்போது அந்த திட்டமும் எந்தெந்த பஸ்களில் உள்ளது என்று தெரியவில்லை,' என, புலம்பினர்.
