அகில இந்திய ரேங்கிங் நீச்சல் போட்டி: மாற்றுத்திறனாளி குழந்தைகள் அசத்தல்
அகில இந்திய ரேங்கிங் நீச்சல் போட்டி: மாற்றுத்திறனாளி குழந்தைகள் அசத்தல்
UPDATED : ஜூன் 14, 2026 12:22 PM
ADDED : ஜூன் 14, 2026 04:29 AM

சென்னை: அகில இந்திய ரேங்கிங் நீச்சல் போட்டியில், மாற்றுத்திறனாளி குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்று அசத்தினர்.
நாட்டின் முதல் மாதாந்திர அகில இந்திய ரேங்கிங் நீச்சல் தொடரின் 9-வது கட்டப் போட்டி, காட்டாங்கொளத்துார், எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நேற்று நடந்தது.
கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 600-க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையன்று நடைபெறும் இப்போட்டி, நீச்சல் வீரர்கள் தங்களின் தரவரிசையை மேம்படுத்தவும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு தயாராகவும் உதவுகிறது. தொடரின் இறுதியில் ஒட்டுமொத்த சாம்பியன்களுக்கு ரொக்கப் பரிசு, பதக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.
இதன் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான 50 மீ., 'ப்ரீஸ்டைல்' நீச்சல் போட்டியும் நடத்தப்பட்டது. இதில், 20 குழந்தைகள் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
