/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கடமை தவறாமல் மனிதாபிமானத்துடன் செயல்பட்ட கேட் கீப்பருக்கு பாராட்டு
/
கடமை தவறாமல் மனிதாபிமானத்துடன் செயல்பட்ட கேட் கீப்பருக்கு பாராட்டு
கடமை தவறாமல் மனிதாபிமானத்துடன் செயல்பட்ட கேட் கீப்பருக்கு பாராட்டு
கடமை தவறாமல் மனிதாபிமானத்துடன் செயல்பட்ட கேட் கீப்பருக்கு பாராட்டு
UPDATED : ஜன 07, 2026 10:05 PM
ADDED : ஜன 07, 2026 01:51 AM

தஞ்சாவூர்: உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, மூடி இருந்த ரயில்வே கேட்டை திறக்க பெண்ணின் உறவினர்கள் வற்புறுத்தியும், ரயில் அருகில் வந்துவிட்டதால் கேட்டை திறக்க மறுத்ததுடன், மறுபக்கம் நிற்கும் தன் பைக்கை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு கூறிய ரயில்வே பெண் கேட் கீப்பரின் செயலை பலரும் பாராட்டினர்.
தஞ்சாவூர் மாவட்டம், பின்னவாசல் - சித்தாதிக்காடு கிராம பகுதி ரயில்வே கேட் கீப்பர் அருள்ஞானடெல்பின், 29. இவர், ஜன., 3ம் தேதி பணியில் இருந்த போது, இரவு, 7:45 மணிக்கு, ராமேஸ்வரம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து செல்வதற்காக, ரயில்வே கேட்டை மூடியுள்ளார்.
அப்போது, பின்னவாசல் பகுதியைச் சேர்ந்த உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை பைக்கில் பேராவூரணியில் உள்ள மருத்துவமனைக்கு, அவரது உறவினர்கள் கொண்டு செல்ல முயன்றனர்.
ரயில்வே கேட் மூடப்பட்டு இருந்ததால், அருள்ஞானடெல்பினிடம், கேட்டை திறந்து உதவுமாறு கூறி, உறவினர்கள் கூச்சலிட்டனர்.
அப்போது, அருள்ஞானடெல்பின், 'ரயில், ஆயிங்குடியை கடந்துவிட்டது. கேட்டை திறக்க முடியாது' என, திட்டவட்டமாக மறுத்தார். அதற்கு, 'ஒரு உயிரை காப்பாத்தணும்மா...' என, உறவினர்கள் கூற, 'என்னை நம்பி பல உயிர்கள் ரயிலில் வருது... என் பைக் அந்த பக்கம் நிற்குது... அதை எடுத்துக்கிட்டு மருத்துவமனை போங்க...' என, அவர் கூறினார்.
உடனே, ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை துாக்கி, தண்டவாளத்தை கடந்து, கேட் கீப்பரின் பைக்கில் செல்ல முயன்றனர்.
அதற்குள் அவர்களின் உறவினர் ஒருவர் பைக்கில் வந்ததும், அந்த பைக்கில் அழைத்துச் சென்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அருள்ஞானடெல்பின் தந்தை அன்பானந்தம், பெரியப்பா அந்தோணிராஜ் ஆகியோர் ரயில்வே கேட் கீப்பராக இருந்தவர்கள்.
கடமையும் தவறாமல், மனிதாபிமானத்தோடு தன் வாகனத்தை கொடுத்து உதவிய இளம் ரயில்வே கேட் கீப்பரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

