மாற்றுத்திறனாளி 'பாடி பில்டர்' சாம்பியன் பட்டம் வென்று சாதனை
மாற்றுத்திறனாளி 'பாடி பில்டர்' சாம்பியன் பட்டம் வென்று சாதனை
UPDATED : ஜூன் 19, 2026 12:10 AM
ADDED : ஜூன் 19, 2026 12:09 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், மாற்றுத்திறனாளி பாடிபில்டர், கிளாசிக் பிசிக் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த காய்கறி வியாபாரி உமர் பரூக், முகமதா தம்பதியின் மகன் ஆசாத் சுலைமான்,27. இவர், வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி.
சிறு வயது முதலே 'பாடி பில்டர்' ஆக மாற வேண்டும் என்ற எண்ணத்தோடு பயிற்சி பெற்றார். தற்போது, புதுடில்லியில் நடந்த உலக அளவிலான 'ஐஎப்பிபி ப்ரோ' போட்டியில் பங்கேற்று, 'ஓவர் ஆல்' சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பயிற்சியாளர் வைஷாக் கூறியதாவது: சுலைமானை பெற்றோர் ஊக்குவித்தனர். 15 வயது முதலே அவருக்கு பயிற்சி அளித்து தயார்படுத்தினோம். அடுத்த கட்டத்துக்கு அவரை தயார்படுத்த எனது பயிற்சியாளர் சந்தோஷிடம் அழைத்து சென்றேன். அவர் கொடுத்த பயிற்சியால் மாற்றம் ஏற்பட்டது. கிளாசிக் பிசிக் (தசை கட்டுப்பாடு) பிரிவில் பயிற்சி அளிக்கப்பட்டது.
சமீபத்தில், புதுடில்லியில் நடந்த 'ஐஎப்பிபி ப்ரோ கார்டு' கிளாசிக் பிசிக் பிரிவில் பங்கேற்றார். இதில், நேர்த்தியான உடலமைப்பை வெளிப்படுத்தி அனைத்திலும் வென்று 'ஓவர் ஆல்' சாம்பியன் பட்டத்தை பெற்று தங்க பதக்கம் வென்றார். சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே அவரது வெற்றிக்கு உந்து சக்தியாக இருந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.
