/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
புதுமையாக செயல்படும் ஸ்ரீ சீதாராம் வங்கி
/
புதுமையாக செயல்படும் ஸ்ரீ சீதாராம் வங்கி
ADDED : பிப் 12, 2024 12:13 AM

அயோத்தி : ஆன்மிகம், மன அமைதி, நம்பிக்கை போன்றவற்றை பரிவர்த்தனை செய்யும் அயோத்தியில் உள்ள ராமர் வங்கியில், 35,000 பேர் கணக்கு வைத்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்த பின், லட்சக்கணக்கான மக்கள் தரிசனத்துக்காக வருகின்றனர்.
இவ்வாறு அயோத்திக்கு வருபவர்களுக்கு, அங்குள்ள சர்வதேச ஸ்ரீ சீதாராம் வங்கி அலுவலகத்தை பார்த்தவுடன், ஒரு ஆர்வம் ஏற்படுகிறது. கடந்த 1970ல் துவக்கப்பட்ட இந்த வங்கியில், தற்போது 35,000 பேர் கணக்கு வைத்துள்ளனர்.
ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் உருவாக்கியது இந்த வங்கி.
இந்த வங்கிக்கு உலகெங்கும், 136 கிளைகளும் உள்ளன.
இந்த வங்கியில் கணக்கு துவக்குபவர்களுக்கு, நோட்டும், பேனாவும் வழங்கப்படுகின்றன. கணக்கு துவக்குவோர் செய்ய வேண்டியது, ராம நாமத்தை எழுதுவது தான். இவ்வாறு எழுதும் ராம நாம புத்தகத்தை ஒப்படைக்கும்போது, அதற்கு முறையாக கணக்கு வைக்கப்படுகிறது.
இதுவரை, 20,000 கோடி ராம நாம புத்தகங்கள் வந்துள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆன்மிகம், மன அமைதி, நம்பிக்கை ஆகியவையே, இந்த கணக்குகளின் பரிவர்த்தனை.
வங்கியின் மேலாளர் புனித் ராம் தாஸ் மஹராஜ் கூறுகையில், ''ஒருவர் தன் வாழ்நாளில், 84 லட்சம் முறை ராம நாமத்தை எழுதினால், மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

