/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
60க்கும் மேற்பட்ட திருட்டுகளில் ஈடுபட்டு சிக்கிய ஐ.டி., ஊழியர்
/
60க்கும் மேற்பட்ட திருட்டுகளில் ஈடுபட்டு சிக்கிய ஐ.டி., ஊழியர்
60க்கும் மேற்பட்ட திருட்டுகளில் ஈடுபட்டு சிக்கிய ஐ.டி., ஊழியர்
60க்கும் மேற்பட்ட திருட்டுகளில் ஈடுபட்டு சிக்கிய ஐ.டி., ஊழியர்
ADDED : பிப் 10, 2026 12:52 AM

விசாகப்பட்டினம்: ஆடம்பர வாழ்க்கைக்காக, 60க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த மென் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில், கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
குற்றச்செயல்
இது குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், காக்கிநாடாவைச் சேர்ந்த ஐ.டி., முன்னாள் ஊழியர் சன்னி என்கிற அச்சி மகேஷ் ரெட்டி, 27, என்பவரிடம் விசாரித்தனர். விசாரணையில், வீடுகளில் திருடியதை அவர் ஒப்புக் கொண்டார்.
இது குறித்து, போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்ட அச்சி மகேஷ் ரெட்டி, முதுகலை பட்டம் பெற்றவர். ஹைதராபாதில் உள்ள பிரபல ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இவர், நல்ல வேலையை விடுத்து, விசாகப்பட்டினத்தின் பல்வேறு இடங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
விசாரணையில், அவருக்கு 26 திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. விலை உயர்ந்த பி.எம்.டபிள்யு., சொகுசு கார் வாங்குவதற்காகவும், வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று சொகுசாக வாழ்வதற்காகவும் அவர் இந்த திருட்டுகளில் ஈடுபட்டுள்ளார்.
மொத்தம் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை திருடிய வழக்குகளில் தேடப்பட்டு வந்த அவரிடமிருந்து, 699 கிராம் தங்க நகைகள், 3.8 கிலோ வெள்ளி பொருட்கள், திருட்டு பணத்தில் வாங்கிய பி.எம்.டபிள்யு., கார், திருட்டுக்கு பயன்படுத்திய ஸ்கூட்டர், கருவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
விசாகப்பட்டினம் மாநகர காவல் ஆணையர் சங்க பிரதா பக்சி கூறியதாவது: கைதான அச்சி மகேஷ் ரெட்டி, 15 வயதிலேயே திருட்டு வழக்கில் சிக்கி சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்றவர். அதன் பிறகும் அவர் திருந்தவில்லை.
தொடர்பு
ஆந்திர முழுதும், 60-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் அவருக்கு தொடர்பு உள்ளதாக போலீஸ் பதிவுகள் கூறுகின்றன. அனைத்து திருட்டு சம்பவங்களிலும் அவர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தற்போது அவர் அடைக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

