/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
உறுப்பு தானம் செய்த குழந்தை அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
/
உறுப்பு தானம் செய்த குழந்தை அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
உறுப்பு தானம் செய்த குழந்தை அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
உறுப்பு தானம் செய்த குழந்தை அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
ADDED : பிப் 16, 2026 12:05 AM

பத்தனம்திட்டா: கேரளாவில் மூளைச்சாவு அடைந்ததை அடுத்து, உடல் உறுப்புகளை தானம் செய்த 10 மாத குழந்தையின் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
கேரளாவின் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த 10 மாத பெண் குழந்தை அலின்ஷெரின் ஆபிரஹாம். கடந்த 5ம் தேதி, குழந்தையின் தாய், தாத்தா, பாட்டி ஆகியோர் கோட்டயத்தில் இருந்து திருவல்லாவுக்கு காரில் சென்றனர்.
குழந்தையும் அவர்களுடன் சென்றது. அப்போது, எதிரில் வந்த மற்றொரு கார் இவர்களின் கார் மீது மோதியது. இதில், ஷெரினின் தாய், தாத்தா, பாட்டி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
விபத்தில் சிக்கிய குழந்தை ஷெரினுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதையடுத்து, குழந்தையின் கல்லீரல், இரு சிறுநீரகங்கள், இதய வால்வு, இரு கண்கள் ஆகியவை தானமாக வழங்கப்பட்டன. இதையடுத்து, மிக இளம்வயதிலேயே உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய பெருமையை ஷெரின் அடைந்தார்.
மலப்பள்ளியில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலுக்கு கேரள அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். உடல் உறுப்பை தானமாக பெற்றவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இறுதிசடங்கில் பங்கேற்றனர்.
பின், நெடுங்கடப்பள்ளியில் உள்ள தேவாலயத்துக்கு குழந்தையின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும் குழந்தையின் உடலுக்கு கேரள மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சிறப்பு பிரார்த்தனையைத் தொடர்ந்து, குழந்தையின் உடல் தேவாலயத்தை ஒட்டிய கல்லறையில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

