/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
பொங்கல் வாழ்த்து மடல்...: மறைந்து போன பழக்கத்திற்கு உயிரூட்டும் அரசு பள்ளி மாணவர்கள்
/
பொங்கல் வாழ்த்து மடல்...: மறைந்து போன பழக்கத்திற்கு உயிரூட்டும் அரசு பள்ளி மாணவர்கள்
பொங்கல் வாழ்த்து மடல்...: மறைந்து போன பழக்கத்திற்கு உயிரூட்டும் அரசு பள்ளி மாணவர்கள்
பொங்கல் வாழ்த்து மடல்...: மறைந்து போன பழக்கத்திற்கு உயிரூட்டும் அரசு பள்ளி மாணவர்கள்
UPDATED : ஜன 11, 2026 10:19 AM
ADDED : ஜன 11, 2026 05:20 AM

பொங்கல் வந்தாலே வீட்டு வாசல்களில் கோலம் மட்டும் அல்ல, தபால்காரரின் 'ட்ரிங்-ட்ரிங்' என்ற சைக்கிள் மணி ஒலியும் சேர்ந்தே ஒலிக்கும். உங்க பேருக்கு ஒரு பொங்கல் வாழ்த்து அட்டை வந்திருக்கு என்று தபால்காரர்கள் கொடுத்துவிட்டு சென்றதும், யாராக இருக்கும் என, ஆயிரம் கேள்விகள் மனதில் எழும். கூடி இருக்கும் உறவுகளும் எட்டி பார்க்கும்.
அவர்கள் முன்னிலையில் அப்படியே அந்த வண்ண மயமான மடல் உறையை திறந்து பார்த்தால், கையெழுத்தில் எழுதப்பட்ட —“இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்”—என்ற வார்த்தைகள் மனதைத் தொடும்.
அந்த பொங்கல் வாழ்த்து மடல் வெறும் காகித அட்டை மட்டும் அல்ல; உறவின்-நட்பின் பாசமாக இருந்தது. ஆனால் காலம் மாறியது. மொபைல் திரைகளில் பொங்கல் வந்துவிட்டது. 'வாட்ஸ் ஆப்' வாழ்த்துகள் ஒரே நொடியில் நுாற்றுக்கணக்கானவர்களை சென்றடைகின்றன.
ஆனால், அந்த விரல் அழுத்தத்தில், கையெழுத்தின் உயிரில், கலந்த பொங்கல் வாழ்த்து மடல் மணமும், எதிர்பார்ப்பின் மகிழ்ச்சியும் மெதுவாக மறைந்துவிட்டது. வாழ்த்து அட்டைகள் இன்று நினைவுகளின் அலமாரியில் துாசிபடர்ந்து கிடக்கும் பழைய புகைப்படங்களாக மாறிவிட்டன. அந்த மறைந்த பழக்கத்துக்கு அரும்பார்த்தபுரம் திரு.வி.க., அரசு உயர்நிலைப்பள்ளி உயிர் ஊட்டி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நெருங்கும் போது, அந்த பள்ளியின் வகுப்பறைகள் ஒரு சிறிய கலைக் கூடமாக மாறுகின்றன. வண்ணக் காகிதங்கள், வரைபடங்கள், கரும்பு, மாட்டு வண்டி, பொங்கல் பானை, ஜல்லிக்கட்டு, இயற்கை காட்சிகள் எல்லாம் மாணவர்களின் கைகளில் உயிர் பெறுகின்றன. அவர்கள் அச்சடிக்கப்பட்ட அட்டைகளை வாங்குவதில்லை; அவர்கள் வாழ்த்து அட்டைகளை உருவாக்குகிறார்கள்.
இந்தாண்டு 6 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உருவாக்கி உறவுகளுக்கு-நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர். ஒரு மாணவன், தன் அட்டையின் மூலையில் மெதுவாக எழுதுகிறான்—“பாட்டி, இந்த பொங்கலுக்கு நான் செய்த அட்டை இது…” அந்த ஒரு வரியில், ஒரு தலைமுறை தாண்டிய பாசம் அடங்கியுள்ளது. மற்றொரு மாணவர், தன் நண்பருக்காக வரையும் சூரியன் போலவே அவளின் முகமும் ஒளிர்கிறது. “அவனுக்கு இது பிடிக்கும்” என்ற எண்ணமே, அந்த அட்டைக்கு அழகை சேர்க்கிறது.
மாணவர்களுக்கு பொங்கல் வாழ்த்து மடல்களை தயாரிக்க பயிற்சி அளித்த ஓவிய ஆசிரியர் அன்பழகன் கூறுகையில், 'இந்த பொங்கல் வாழ்த்து மடல்கள் தபால் உறையில் அடைக்கப்படும் போது, அதில் சேர்க்கப்படுவது வாழ்த்து மட்டும் அல்ல—மாணவரின் நேரம், உழைப்பு, கனவு, அன்பு எல்லாமே கலந்து இருக்கும். இந்த அரசு பள்ளி மாணவர்கள், அறியாமலேயே ஒரு பெரிய பாடத்தை கற்றுக் கொடுக்கிறார்கள். தொழில்நுட்பம் வளர்ந்தாலும், மனித உணர்ச்சிக்கு மாற்று இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்கின்றனர். ஒரு வாழ்த்து அட்டை, ஒரு உறவை மீண்டும் இணைக்க முடியும். ஒரு கையெழுத்து, ஒரு இதயத்தை நெகிழ வைக்க முடியும். பொங்கல் என்பது பானையில் பொங்கும் அரிசி மட்டும் அல்ல. அது உள்ளத்தில் பொங்கும் அன்பு. அந்த அன்பை, காகிதத்தில் வடித்து, உறையில் அடைத்து, உறவுகளுக்குள் பயணிக்கச் செய்கிறோம்.
உண்மைய சொல்லணும்னா, இது பாடத்திட்டத்துக்காக மட்டும் இல்ல. குழந்தைகளுக்கு மனித உறவுகளோட மதிப்பு தெரியணும்னு தான். ஒரு வாழ்த்து அட்டையை தானே செய்து, யாருக்காக எழுதுறாங்கன்னு நினைச்சு எழுதும்போது, அவங்க மனசு மென்மையா மாறுது. அது எந்த மொபைல் மெசேஜாலும் வராத உணர்ச்சி. இது வாழ்த்து அட்டை திட்டம் கிடையாது. இது ஒரு பண்பாட்டு பாடம். பொங்கல் பண்டிகையோட உண்மையான அர்த்தம்—நன்றி, உறவு, பகிர்வு—இதையெல்லாம் குழந்தைகளுக்குள் விதைக்குற ஒரு சிறிய முயற்சி தான்' என்றார்.
உண்மையில் இந்த வாழ்த்து அட்டை திறக்கப்படும்போது மனித உறவுகள் இன்னும் உயிருடன் தான் இருக்கின்றன என்பதை அழுத்தமாகவே சொல்லும் தானே...

