/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
இருமுடி கட்டு ஏந்தி சபரிமலைக்கு ஸ்கேட்டிங்
/
இருமுடி கட்டு ஏந்தி சபரிமலைக்கு ஸ்கேட்டிங்
UPDATED : ஜன 02, 2025 08:20 PM
ADDED : ஜன 01, 2025 09:07 AM

பாலக்காடு : கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், அகத்தேத்தறை பகுதியைச் சேர்ந்த மணி- - ருக்மணி தம்பதியின் மகன் மனுராஜ், 16, மலம்புழா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர். இவர், ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று, தேசிய அளவிலான போட்டிகளில் பரிசு பெற்றவர்.
இவர், குறைந்தபட்ச உயரத்திற்கு கீழே ஸ்கேட்டிங் செய்து பிரபலமானவர். மேலும், 60 கி.மீ., துாரம் ஸ்கேட்டிங் பயணம் செய்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், சபரிமலை யாத்திரையில் ஸ்கேட்டிங் செய்து சாதித்துக் காட்டியுள்ளார்.
மனுராஜ் கூறியதாவது:
சபரிமலைக்கு, 260 கி.மீ., புனித யாத்திரையை டிச., 19ல் துவங்கி, 21ல் சன்னிதானம் சென்றடைந்து, அய்யப்ப சுவாமியை தரிசனம் செய்தேன். பயணத்தில், மேடு பள்ளங்களை கடந்து செல்வது சவாலாக இருந்தது.
தந்தை மணி, ஸ்கூட்டரில் என்னுடன் பயணித்தார். மேலும், ஜீப்பில் மலம்புழா சுகாதார மைய செவிலியரான தாய் ருக்மணியும் என்னுடன் பம்பை வரை வந்திருந்தனர். பயணத்தில் உடல்நிலை பிரச்னை எதுவும் ஏற்படவில்லை. விபத்தை தவிர்க்க வேகத்தை குறைத்து, தினமும், 100 கி.மீ., பயணித்தேன்.
பம்பையில் இருந்து, படிக்கட்டுகள் இல்லாத, வாகனங்கள் செல்லும் பாதையில், ஸ்கேட்டிங் செய்து சென்று, சுவாமி தரிசனம் செய்தேன். அதன்பின், வாகனத்தில் ஊர் திரும்பி வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

