ADDED : பிப் 12, 2025 12:15 AM

கோவை; கோவை சின்னவேடம்பட்டி கவுமார மடாலயத்தில் தைப்பூச திருவிழா நடந்தது. இதில், பள்ளி மாணவி ஒருவர், இரண்டாம் நுாற்றாண்டு தமிழில், கந்தசஷ்டி கவசம் எழுதி அசத்தினார்.
கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள தண்டபாணி சுவாமி கோவிலில் நேற்று தைப்பூச திருவிழா நடந்தது. சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் துவக்கி வைத்தார். தண்டபாணி சுவாமிக்கு, அபிஷேகம், அலங்காரம் நடந்தது. ராஜ அலங்காரத்தில் தண்டபாணி அருள் பாலித்தார்.
நிகழ்ச்சியை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி மாணவி கனிஷ்கா, கந்த சஷ்டி கவசத்தை, பழங்கால தமிழ் 2ம் நுாற்றாண்டு எழுத்துக்களால் எழுதினார். குமரகுருபர சாமிகள் வாழ்த்து தெரிவித்தார்.
காலை 10:30 மணிக்கு எழுதுவதை தொடங்கி, ஒரு மணி நேரத்தில் 38 பக்கங்களில் கந்த சஷ்டி கவசத்தை எழுதி முடித்தார். பள்ளி தமிழ் ஆசிரியை மைதிலி கூறுகையில், இரண்டாம் நுாற்றாண்டில் இருந்த தமிழை கற்றுத்தர வேண்டும் என்ற ஆர்வத்தால், விரும்பிய மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தோம். ஆர்வமுடன் கற்ற மாணவர்கள், பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகின்றனர்,'' என்றார்.
