/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
பெண் உசேன் போல்ட் கர்நாடகாவின் ஸ்னேகா
/
பெண் உசேன் போல்ட் கர்நாடகாவின் ஸ்னேகா
UPDATED : அக் 25, 2024 02:45 PM
ADDED : அக் 25, 2024 07:56 AM

ஓட்டப்பந்தயம் என்றாலே முதலில் நமக்கு நினைவு வருவது ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் தான். 100 மீட்டர் ஓட்டப்பந்தய பாதையை 9.58 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தவர்.
ஓட்டப்பந்தய வீரர்களுக்கு எல்லாம் உசேன் போல்ட் போன்று ஆக வேண்டும் என்ற கனவு கண்டிப்பாக இருக்கும். ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் மட்டும் தான் உசேன் போல்ட் ஆக வேண்டுமா.
நாங்களும் ஆக கூடாதா என்பது போல சில ஓட்டப்பந்தய வீராங்கனைகளும் ஜொலிக்கின்றனர்.
அவர்களில் ஒருவரை பற்றி பார்க்கலாம்.
கர்நாடகாவின் சிக்கமகளூரு ஜானுவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சினேகா, 26. இவரது குடும்பம் விவசாய பின்னணி கொண்டது. ஆரம்ப பள்ளி படிக்கும் போதே ஓட்டப்பந்தயத்தின் மீது ஸ்னேகாவுக்கு ஆர்வம் ஏற்பட்டது. பள்ளி அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று அசத்தினார்.
ஸ்னேகா உயர்கல்வி படிக்கும் நிலைக்கு வந்த போது, அவரது குடும்பம், கேரளாவின் கோட்டயத்திற்கு மாறியது. அங்கு உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் பட்டப்படிப்பு படித்து கொண்டே ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்றார்.
மீண்டும் அவரது குடும்பம் சொந்த ஊருக்கு வந்தது. மங்களூரில் உள்ள ஆலுவா அறக்கட்டளை, ஸ்னேகா திறமையை கண்டறிந்து அவரை ஊக்குவித்தது.
ஓட்டப்பந்தயத்தில் அவர் ஜொலிக்க அனைத்து உதவிகளும் செய்து கொடுத்தனர். கடந்த 2023ம் ஆண்டு கோவாவில் நடந்த 37வது சர்வதேச ஓட்டப்பந்தய போட்டியில் 100 மீ ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட, ஸ்னேகா 11.41 வினாடிகளில் இலக்கை அடைந்து, அனைவரின் புருவத்தையும் உயர்த்தி பார்க்க வைத்தார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, வருமான வரித்துறையில் மல்டி டாஸ்க் ஸ்டாப் பணியில் சேர்ந்தார்.
இதில் கிடைக்கும் சம்பளம், அவரது உடலை மேம்படுத்தவும், விளையாட்டு உடைகள், ஷூக்கள் வாங்க மட்டுமே உதவுகிறது. மற்ற மாநிலங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க செலவு அதிகம் வருகிறது.
''கடன் வாங்கி செல்கிறேன். அதை திரும்ப செலுத்த நீண்ட நாட்கள் ஆகிறது. செலவுகளை நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது,'' என்று ஸ்னேகா வருத்தமாக கூறுகிறார். ஆனாலும் மனம் தளராமல் ஓட்டப்பந்தய போட்டியில் ஜொலிக்கிறார். - நமது நிருபர் -