சிறந்த மண்வளத்துக்கு ஐ.நா., பரிசு: பொள்ளாச்சி விவசாயிக்கு மூன்றாமிடம்
சிறந்த மண்வளத்துக்கு ஐ.நா., பரிசு: பொள்ளாச்சி விவசாயிக்கு மூன்றாமிடம்
ADDED : ஜூன் 01, 2026 06:15 AM

கோவை: மண் வளத்தை சிறப்பாக மேம்படுத்திய பொள்ளாச்சி இயற்கை விவசாயியை ஐ.நா அங்கீகரித்துள்ளது. அவருக்கு உலகளவில் மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் வேளாண் பிரிவு சார்பில் உலகளவில் சிறந்த மண் வளம் உருவாக்கியுள்ள, இயற்கை விவசாயிகளை அங்கீகரித்துள்ளது. இதில் சீனா, இந்தோனேசியா நாடுகள் முதல் மற்றும் இரண்டாவது பரிசுகளை பெற்றன. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதுார் பகுதியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி வள்ளுவன் மூன்றாம் பரிசை பெற்றுள்ளார்.
இதுகுறித்து வள்ளுவன் கூறியதாவது: 17 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். மண் வளம் ஆரோக்கியமாக இருந்தால் தான், விளை பொருள் தரமாக இருக்கும். நான் இயற்கை விவசாயத்தில் இறங்குவதற்கு முன்பு மண்ணில் 0.5 அங்கக கரிம சத்து இருந்தது. இப்போது 3.36 அங்கக கரிம சத்து உள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அங்கக கரிம சத்து 1.56 இருந்தது. அதனடிப்படையில் தான் மூன்றாவது பரிசு கிடைத்துள்ளது. இப்போது ஆய்வு செய்தால் நமக்கு தான் முதல் பரிசு கிடைக்கும்.
ஈஷாவின் மண் காப்போம் முன்னெடுப்பு தான் இந்த மாற்றத்திற்கு காரணம். விஞ்ஞான ரீதியாக வழிநடத்துதலை அவர்கள் தான் கொடுத்தனர். மண் வளம் தான் முக்கியம் என உலகளவில் அதை நோக்கி பயணத்தை தொடங்கிவிட்டனர். பல்பயிர் சாகுபடியில் ஈடுபடும்போது மண் வளம் மேம்பட்டு, விவசாயிகளின் பொருளாதாரம் உயர் வடையும். இவ்வாறு கூறினார்.
