/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
வடமாநில தொழிலாளருக்கு வரவேற்பு: உள்ளூர் தொழிலாளர்கள் புறக்கணிப்பு
/
வடமாநில தொழிலாளருக்கு வரவேற்பு: உள்ளூர் தொழிலாளர்கள் புறக்கணிப்பு
வடமாநில தொழிலாளருக்கு வரவேற்பு: உள்ளூர் தொழிலாளர்கள் புறக்கணிப்பு
வடமாநில தொழிலாளருக்கு வரவேற்பு: உள்ளூர் தொழிலாளர்கள் புறக்கணிப்பு
UPDATED : மார் 14, 2026 12:51 PM
ADDED : மார் 14, 2026 05:58 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் உள்ள தொழிற்சாலை பணிக்கு உள்ளூர் தொழிலாளர்களை புறக்கணித்து,வடமாநில தொழிலாளர்களுக்கு அழைப்பு விடும் விதமாக, ஹிந்தி மொழியில் வேலைவாய்ப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகள் என, 350 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
தொழில் சங்கங்களால் சந்திக்கும் பிரச்னை, தொழிற்சாலை விபத்து காலத்தில் உள்ளூர் மக்களால் ஏற்படும் பிரச்னை உள்ளிட்டவைகளை தவிர்க்கும் வகையில், பெரும்பாலான தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் உள்ளூர் மக்களுக்கு வேலை தர முன்வருவதில்லை.
இதனால், பீஹார், ஒடிஷா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளனர். அவர்களும் நிரந்தர பணியாளர்களாக இல்லாமல், ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு வைத்துள்ளனர்.
உற்பத்தி பாதிக்காமல் இருக்க, தினமும் வேலைக்கு வரவேண்டும் என்பதற்காக, தொழிற்சாலை வளாகம் அல்லது அதை ஒட்டியுள்ள வாடகை கட்டடத்தில் கூட்டமாக தங்க வைக்கப்படுகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் இருந்தால், குறைந்த செலவில் எந்த பிரச்னையும் இன்றி தொழிற்சாலையை இயக்கலாம் என, தொழிற்சாலை நிர்வாகத்தினர் கருதுகின்றனர்.
தற் போது, கும்மிடிப்பூண்டி பகுதியில், 25,000த்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
மேலும், அவர்களின் தேவை அதிகரித்து வருவதால், வடமாநில தொழிலாளர்களுக்கு மட்டும் அழைப்பு விடும் வகையில், கும்மிடிப்பூண்டி பகுதிகளில், வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், ஹிந்தி மொழியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த சுவரொட்டியில், 'உடனடி தேவை' என்ற தலைப்பில், தினமும் பிளாஸ்மா ஆப்பரேட்டருக்கு 1,200 ரூபாய், வெல்டிங் மிஷின் ஆப்பரேட்டருக்கு 1,100 ரூபாய், போர்க்லிப்ட் ஆப்பரேட்டருக்கு 1,125 ரூபாய் எனவும், தங்கும் வசதி, வேலை நேரங்களில் இலவச உணவு வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ளூர் தொழிலாளர்களை புறக்கணித்து, வடமாநில தொழிலாளர்களுக்கு வரவேற்பு அளிக்கும் போக்கு வெளிப்படையாக தெரிய வருகிறது என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

