sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இது உங்கள் இடம்/ பொதுவான திட்டங்கள் அனைவருக்குமானவை!

பொதுவான திட்டங்கள் அனைவருக்குமானவை!

பொதுவான திட்டங்கள் அனைவருக்குமானவை!


PUBLISHED ON : ஜூலை 29, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மணிபிரபு, கம்பத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய பட்ஜெட்டில் அறிவித்த பொதுவான திட்டங்கள் நடைமுறைக்கு வரும்போது, அவை அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

தமிழக பட்ஜெட் அறிவிக்கும் போது தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் எனக் குறிப்பிட்டு, பட்ஜெட் எதுவும் அறிவிப்பதில்லை; பொதுவாக அறிவிக்கும் திட்டங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் கிடைக்கும்.

மகளிர் உதவித்தொகை, இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை போன்றவற்றை அறிவிக்கும் போது குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் தான் என கூறி அறிவிப்பதில்லை; அனைத்து மாவட்டங்களுக்கும் இது பொதுவாக அறிவிக்கப்படுகிறது.

இளைஞர்களுக்கு, பெண்களுக்கு வேலைவாய்ப்பு, படிப்புக்கு ஊதியம், பெண்கள் தங்கும் விடுதி போன்றவை அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவை.

நகரங்கள், கிராமப்புறங்களில் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும்

20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கும் திட்டம்

உயர்கல்வி பெற 10 லட்சம் வரையிலான கடன்

வேளாண் துறைக்கு 1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

விவசாயத் துறைகளில் 32 தோட்டக்கலைகளில் 109 வகையான அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகம்

வேலைவாய்ப்பு, கல்வித்திறன் மேம்பாட்டிற்கு, 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

80 கோடி மக்களுக்கு உணவு தானியம் வழங்கும் திட்டம், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் உச்ச வரம்பு, 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்வு

தொழில் பயிற்சி பெறும் 1 கோடி இளைஞர்களுக்கு பழகுனர் ஊக்கத்தொகை மாதந்தோறும் 5,000 ரூபாய் வழங்கல்

ஊரக மேம்பாட்டுத்துறைக்கு 2.66 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

மாநில அரசுகளோடு இணைந்து பல்வேறு நகரங்களை வளர்ச்சி மையமாக மேம்படுத்த முடிவு

மாநில அரசு வங்கிகளோடு இணைந்து நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய திட்டம்

புதிதாக பணிகளில் சேரும் இளைஞர்களுக்கு அரசு தரப்பில் ஒரு மாத ஊதியம்

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய இலவச வீடுகள்

புற்றுநோயாளிகள் நிவாரணம் பெரும் வகையில் மூன்று வகையான மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் ஆகியவற்றுக்கு சுங்க வரியில் இருந்து முழு விலக்கு

மொபைல் போன்கள் மற்றும் அது தொடர்பான இதர சாதனங்கள் மீதான சுங்கவரி 15 சதவீதம் குறைப்பு

தங்கம் மீதான சுங்க வரி குறைப்பு

வெள்ளி மீதான சுங்க வரி குறைப்பு

வருமான வரி கணக்கை குறிப்பிட்ட நாளுக்குள் தாக்கல் செய்யவில்லையெனில் இனி குற்றமாகாது

1961ஆம் ஆண்டு வருமான வரி சட்டம் 6 மாதங்களுக்குள் சீராய்வு செய்யப்படும்

தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான நிலையான வரி கழிவு 50,000 ரூபாயில் இருந்து 75,000 ரூபாய் ஆக உயர்வு

புதிய வருமான வரி முறையில் 3 லட்சம் ரூபாய் வரை வரி இல்லை

இன்ன பிற வருமான வரிச் சலுகைகள்

போன்ற அறிவிப்புகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவை.

இந்த புதிய திட்டம் அமலுக்கு வந்தால் தமிழ்நாட்டிலும் அமலில் தான் இருக்கும். எனவே அறிவிப்பு இடம்பெறாத மாநில மக்கள், 'எங்கள் மாநிலத்திற்கு பட்ஜெட் அறிவிக்கவில்லை' என வருத்தப்படத் தேவையில்லை.

தப்புமா யோகி அரசு?@





வி.சி.கிருஷ்ணரத்னம், காட்டாங்கொளத்துார், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

உ.பி.,யில் 2022ல் சட்ட சபை தேர்தல் நடந்தது. 403 சட்டசபை தொகுதிகளில், 255ஐ பா.ஜ., கைப்பற்றியது; சமாஜ்வாதி 111 இடங்களில் வென்றது. இரண்டாம் முறையாக, யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றார்.

ஆனால், சமீபத்திய லோக்சபா தேர்தலில் பா.ஜ., பலத்த அடி வாங்கியது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில், வெறும் 33 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

இதைக் காரணம் காட்டி, அம்மாநில துணை முதல்வரும், யோகிக்கு எதிராக செயல்படும் வகையில் காய்களை நகர்த்துபவருமான கே.பி.மவுரியா, கட்சி மேலிடத்திற்கு யோகியைப் பற்றி, 'போட்டு'க் கொடுத்த வண்ணம் உள்ளார். இருவருக்கும் கடும் மோதல் நடப்பதாக, உ.பி.,யிலிருந்து தகவல்கள் வருகின்றன.

மவுரியா தன் எக்ஸ் பக்கத்தில், 'அரசை விட கட்சி தான் பெரியது. தொண்டர்களின் வலி எனக்கும் வலி. கட்சியை விட பெரியவர்கள் யாரும் இல்லை. தொண்டர்களே பெருமை' எனக் குறிப்பிட்டிருந்தார்.

பா.ஜ., தலைவர்களை சந்தித்த பின், மவுரியா வெளியிட்ட இந்தப் பதிவு, அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

மேலும், இந்தப் பதிவின் மூலம் யோகி ஆதித்ய நாத் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்தச் சூழலில், உ.பி ஆளுநர் ஆனந்திபென் பட்டேலையும் யோகி ஆதித்யநாத் சந்தித்து பேசியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சி சும்மா இருக்குமா? அதன் தலைவர் அகிலேஷ், தன் எக்ஸ் பக்கத்தில், 'மழைக்காலக் கூட்டத்தொடர் சலுகை: நுாறைக் கொண்டு வாருங்கள், ஆட்சி அமைக்கலாம்' என்றிருக்கிறார்.

இவரின் ஆசை நிறைவேறுவதும், நிறைவேறாததும் பா.ஜ.,வினரின் ஒற்றுமையில் இருக்கிறது!

இருட்டில் தவிக்கும் உலகளந்தவர்!




ஈ.எஸ்.சந்திரசேகரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

கடந்த வாரம், நான், என் மனைவி மற்றும் சில உறவினர்களோடு, கள்ளக்குறிச்சியில் உள்ள திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலுக்கு சென்று இருந்தேன். மாலை 4:50 மணி இருக்கும்.

கோவில் அர்ச்சகர்கள், 'இரவு 7:00 மணி வரை நித்ய பூஜை; அதன் பின் தான் சுவாமி தரிசனம் செய்ய முடியும்' எனக் கூறி விட்டனர்; காத்திருந்தோம்.

இரவு 7:00 மணிக்கு அனுமதித்தனர். கோவிலைச் சுற்றிப் பார்த்தால், தலையே சுற்றிவிடும் போலிருந்தது.

கோவிலுக்குள் எங்கும் இருட்டு. எலிகள், பெருச்சாளிகள், வவ்வால்கள் நீக்கமற நிறைந்துஇருந்தன.

கோவிலின் அனைத்து கோபுரங்களும் இருளில் மூழ்கிக் கிடந்தன. எங்கோ குகைக்குள் சிக்கிக் கொண்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. விளக்கும் இல்லை, மின் விசிறி வசதியும் இல்லை; துழாவித் துழாவிச் செல்வதற்குள் மூச்சு முட்டி, தலைசுற்றியது.

கோவில் வெளியே நான்கு புறமும், மலை போல் குப்பை குவிக்கப்பட்டு உள்ளன.

என்ன செய்கிறது அறநிலையத் துறை?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us