தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ சிதம்பரம் பேச்சு ரொம்ப 'ஓவர்!'

சிதம்பரம் பேச்சு ரொம்ப 'ஓவர்!'

சிதம்பரம் பேச்சு ரொம்ப 'ஓவர்!'


PUBLISHED ON : ஏப் 30, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ந.கோதை ஜெயராமன், சென்னையில் இருந்து எழுதுகிறார்: காங்கிரசைச் சேர்ந்த காமராஜர் முதல்வராக இருந்தபோது, விருதுநகர் நகராட்சியில், இவரது சகோதரி, தெரு குழாயில் தண்ணீர் பிடிக்க வரிசையில் நின்றதை பார்த்த அதிகாரிகள், அவர் வீட்டிற்கு தண்ணீர் கொடுத்தால், காமராஜரின் நன்மதிப்பை பெறலாம் என்ற கணக்கு போட்டு, ஏற்பாடு செய்தனர்.

அவர்களின் திட்டத்தைத் தவிடுபொடியாக்கி, வீட்டு குழாயை அப்புறப்படுத்த கூறினார் காமராஜர். தன் சகோதரியின் மகன் குற்றச்செயல் புரிந்தும், அவரைக் கைது செய்யாமல் காலம் தாழ்த்திய காவல்துறையினரைக் கண்டித்து, உடனடியாக சகோதரி மகனை கைது செய்யச் சொன்னவர் காமராஜர்.

சமீபத்தில், மயிலாப்பூரில் தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பேசிய சிதம்பரம், 'வரும் காலங்களில் காமராஜரை போல் சிறப்பான ஆட்சி புரிந்தவர் என்ற பெயரை, மு.க.ஸ்டாலின் பெறுவார்' என்றார்.

கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகத்தில், 'நானும், நண்பர் கருணாநிதியும் டீ குடிக்கவும், பஸ்சில் பயணம் செய்யவும், 25 காசுகள் இல்லாததால், கடற்கரை காந்தி சிலையில் இருந்து, ஆயிரம் விளக்கு வரை நடந்தே வந்தோம்' என்று எழுதினார்; இதை கருணாநிதியே மறுக்கவில்லை.

ஆனால் இன்று கருணாநிதியின் பேரன் உதயநிதி, நடிகைக்கு 50 கோடி ரூபாய்க்கு சொகுசு பங்களா வாங்கி கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. மேலும், இவர்கள் குடும்பத்தினர் சேர்த்து வைத்துள்ள பணத்தை அரசு கைப்பற்றினாலே, ஓராண்டுக்கு தடையின்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளமாக கொடுக்கலாம்.

இன்று உள்ள அமைச்சர்களின் சொத்துக்களை கைப்பற்றினால், தமிழக அரசின் கடன்களை அடைத்து விடலாம். இந்த பேருண்மை நன்கு தெரிந்தும், தன் மகனுக்கு ஆதரவாக தி.மு.க., செயல்பட வேண்டும் என்ற ஒற்றை காரணத்துக்காக, இப்படி, 'ஜிங்சாக்' கொட்டுகிறார் சிதம்பரம்.

கருவாடு மீனாகலாம்; ஒருபோதும் ஸ்டாலின் காமராஜர் ஆகமுடியாது.

---

மோடிக்கும் சேர்த்து தான் இந்த வசை!


சுப்ர.அனந்தராமன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு' விவகாரத்தை நினைத்தால் கதி கலங்குகிறது. தமிழ்நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது?

இந்த மாதிரியான அட்டூழியங்கள் எல்லாம் நடக்கும் என்று சிந்தித்த ராஜாஜி, சென்னை ராஜதானி முதல்வராக பதவி அமர்ந்த உடன் முதல் வேலையாக செய்த நடவடிக்கை, ரேஷன் கடைகளை இழுத்து மூடியது தான்.

மொழிவாரி மாநிலங்கள் அமையாத காலம் அது. முதல்வர் என்பவர், பிரதமர் என்றே அழைக்கப்பட்டார்.

ரேஷன் என்ற உணவுப் பங்கீட்டு முறை, அரசால் நிர்வகிக்கப்பட்டால், ஊழலும், மோசடிகளுமே மிஞ்சும் என்பதை அறிந்து, ரேஷன் கடைகளை மூடினார். ரேஷன் கடைகளில் பணிபுரிந்த அரசு ஊழியர்கள் அனைவருக்கும், வேறு துறைகளில், அவரவர் தகுதிக்கேற்ப பணி மாறுதல் செய்து, ஒருவர் கூட வேலை இன்றி தவிக்கக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்தினார்.

கூடவே, பரம ஏழைகளுக்கு, உணவு தானியங்கள், மண்ணெண்ணெய், விறகுகள், காய்கறிகள் அனைத்தும் மலிவு விலையில் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

தர்ம சிந்தனையுள்ள நாட்டுக்கோட்டை செட்டியார்கள், மார்வாரி தனவந்தர்கள், ஆற்காடு நவாப் வம்சத்து வள்ளல்கள் எல்லாரையும் சந்தித்து, அவர்கள் மூலம் மலிவு விலை கடைகளை ஏற்படுத்தி, அவர்கள் வாயிலாகவே நியாய விலைக் கடைகளை நடத்த ஏற்பாடு செய்தார்.

சென்னை ராஜதானியைச் சேர்ந்த, தற்போதைய கேரளாவின் பாலக்காடு, கோழிக்கோடு, ஆந்திரம் ஆகிய பிரதேசங்களிலும் எவ்விதத் தாமதமுமில்லாமல் உணவுப் பொருட்கள் கிடைத்தன.

சென்னை சேத்துப்பட்டு பகுதியிலுள்ள, மேரி கிளப்வாலா ஜாதவ் என்ற பார்சி இனத்து பெண் நடத்திய நியாய விலைக் கடைகளைப் பற்றி, இன்றும் சென்னைவாழ் சீனியர் சிடிசன்கள் பேசக் கேட்கலாம்.

'எல்லாவற்றையும் நாங்களே நடத்துவோம்; நாங்களே கொள்ளையடிப்போம்' என்ற நடைமுறை தான், தற்போதைய ஆட்சி யாளர்களின் ஆசையாக இருக்கிறது.

நாளைக்கு இதே போன்ற ரேஷன் பொருட்கள், 'க்ரீனேடு'கள் உதவியுடன் கடத்தப்படலாம் என்ற அச்சமும் ஏற்படாமல் இல்லை.

மக்களுக்கு நல்லது செய்கிறேன் பேர்வழி எனக் கிளம்பியுள்ள அரசியல்வாதிகளைக் கண்டால், கோபம் தான் ஏற்படுகிறது. அவர்களுக்கு வயிற்றுப் பிழைப்புக்கான வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் தீர்க்க சிந்தனையை விட்டுவிட்டு, 'ரேஷன் கார்டு, கத்தரிக்காய்; இலவச பஸ், வெண்டைக்காய்; உரிமைத்தொகை, சுண்டைக்காய்; சாராயம், கள்ளிப்பால்' என, எதற்குக் கிளம்புகிறீர்கள்?

'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' என, ஓட்டுக்காக முழக்கமிடும், மோடியையும் சேர்த்து தான் சொல்கிறேன்!



பட்டியலை முன்கூட்டியே பார்க்காதது ஏன்?


சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கோவை லோக்சபா தொகுதியில், ஓட்டுப்பதிவு நாளன்று, தனக்கு விழ வேண்டிய ஒரு லட்சம் ஓட்டுகளை, தி.மு.க., அரசு திட்டமிட்டு நீக்கிவிட்டது என, பா.ஜ., தலைவர் அண்ணாமலை சொன்னது, ஒரு காமெடி.

சாதாரண தொண்டர் இதைச் சொல்லி இருந்தால், சரி எனக் கேட்டுக் கொள்ளலாம். எல்லாம் தெரிந்த, ஐ.பி.எஸ்., வேலை பார்த்த, பிரதமர் மோடியுடன் மிக நெருக்கமாக பழகக் கூடிய அண்ணாமலை சொன்னது, அதிக சிரிப்பை தான் வரவழைக்கிறது.

தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, பல மாதங்கள் ஆகிவிட்டது. தன் தொகுதியில் எந்த தெருவில், எத்தனை வாக்காளர்கள் இருக்கின்றனர் என்பது முதல், 'பூத் ஸ்லிப்' வினியோகிப்பது வரை, 'கன் பாயின்ட்' துல்லியமாய் வேலை நடந்திருக்க வேண்டுமல்லவா?

பா.ஜ.,வின் எந்த உறுப்பினரும், எந்த வீட்டையும் எட்டிப் பார்க்கவே இல்லை. பிரமாதமாய், 'ரோடு ேஷா' நடத்தினர், மோடியும், அண்ணாமலையும். தெய்வங்கள் சாலையில் ஊர்வலமாகச் செல்லும்போதும், சினிமா பட நடிகை - நடிகர் ஊர்வலம் வருகிறார் என்னும்போதும் தான் அனைவரும் பாய்ந்து சென்று பார்ப்பர்; அண்ணாமலை என்ன சினிமா பட ஹீரோவா, எல்லாரும் கன்னத்தில் போட்டுக் கொண்டு, வாய் பிளந்து பார்த்து நிற்க?

'ஆனாலும் அந்த சிடுசிடு முகத்தை அண்ணாமலை சற்று மாற்றிக் கொள்வது நல்லது' என்று நாம் நினைத்திருக்கும் வேளையில், அவரின் இந்தப் புலம்பல் சகிக்க முடியவில்லை.

'வாக்காளர் பட்டியலில் குளறுபடி இல்லை' என, தேர்தல் ஆணையம் கூறி விட்ட நிலையில், நீதிமன்றம் தான் செல்ல வேண்டுமே தவிர, வேறு எவரையும் குறை கூறக் கூடாது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us