PUBLISHED ON : பிப் 24, 2025 12:00 AM

வி.மீனாட்சி
பட்டாபிராமன், முனைவர், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஆசிரியர்களும், கல்வியாளர்களும் தீர்மானிக்க வேண்டிய புதிய கல்விக்
கொள்கையை, ஆளும் தி.மு.க., அரசும், அதன் கூட்டணி கட்சிகளும் தீர்மானம்
செய்து, அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது வேடிக்கை!
ஆன்மிகம் முதல் அறிவியல் வரை அனைத்திலும் அரசியல் செய்வதே இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.
'மும்மொழி கொள்கையை தமிழகம் ஏற்காது' என்கிறார் உதயநிதி. அதற்கு அவர் சொல்லும் காரணம், ஹிந்தி படித்தால் தமிழ் மழுங்கிவிடுமாம்!
முன்னாள்
பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், ஜெயலலிதா போன்றோர் பல மொழிகள் அறிந்தவர்கள்.
ஒரு மொழி கூடுதலாக கற்றதால், அவர்களது தாய்மொழி மழுங்கியதாக சரித்திரம்
இல்லையே!
'இது ஒவ்வொரு மாணவனின் உரிமைக்கான பிரச்னை என்பதால், ஆர்ப்பாட்டம் செய்கிறோம்' என்று கூறுகிறார்.
ஆர்ப்பாட்டத்திற்கு
முன் எத்தனை மாணவர்களை கலந்து ஆலோசித்தார்? மாணவர் பிரச்னை என்றால்
மாணவர்கள் அல்லவா ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்? இதில் அரசியல்வாதிகளுக்கு
என்ன வேலை?
திருப்பரங்குன்றத்தில் நடந்த ஆன்மிக போராட்டத்தில்
பங்கேற்றோர் அனைவரும் முருக பக்தர்களான ஆன்மிகவாதிகள். அதுபோல
இப்போராட்டத்திலும், 'எங்களுக்கு ஹிந்தி வேண்டாம்' என்று சொல்லும்
மாணவர்கள் அல்லவா பங்கேற்க வேண்டும்? உதயநிதிக்கு இங்கு என்ன வேலை?
'தமிழ்
மொழியை காக்க உயிரை விடவும் தயாராக உள்ளோம்' என்று கூறுகிறார் உதயநிதி.
உயிரை எல்லாம் விட வேண்டாம்; நீங்களும், உங்கள் தந்தையும், தமிழை
பிழையில்லாமல் உச்சரித்தால் போதும்!
கல்வியை அரசியலாக்கி, உங்கள் அரசியல் சதுரங்கத்தில் மாணவர்களை பகடைகளாக்கி, அவர்கள் வாழ்வோடு விளையாடாதீர்கள்.
உங்கள் கட்சியினர் நடத்தும் தனியார் பள்ளிகளின் தரத்தை உயர்த்த, அரசு பள்ளி மாணவர்களின் கல்வியோடு மல்லுக்கட்டாதீர்கள்!
செம்மலைக்கு தெரியாதா?
செ.சாந்தி, மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வேங்கைவயல் பிரச்னையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு, பின் குற்றவியல் சட்டத்தின் கீழ் சாதாரண வழக்காக மாற்றப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து, அந்த வழக்கின் வீரியத்தை நீர்த்து போகச் செய்துள்ளது, தி.மு.க., அரசு' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை, அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989ன் படி, பிற இனத்தைச் சேர்ந்த ஒருவர், அவர்களுக்கு கொடுமைகள் செய்திருந்தால் மட்டுமே, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்ய முடியும்.
ஆனால், வேங்கைவயல் சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் செய்தவர் யார், என்ன ஜாதியைச் சேர்ந்தவர் என்று தெரியாத நிலையில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் நடந்தபோது, பதற்றமான சூழ்நிலையில் நிலைமையை சமாளிக்க, காவல்துறை அச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருக்கலாம்.
ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 100க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை செய்துள்ளனர்.பல ஆவணங்கள், மொபைல் போன் அழைப்புகளை ஆய்வு செய்துள்ளனர்; குரல் மாதிரி மற்றும் டி.என்.ஏ., மரபணு சோதனைகளும் செய்துள்ளனர்.
இவ்வளவு விசாரணைகளுக்கு பின், இச்சம்பவத்தில் பிற ஜாதியினர் ஈடுபடவில்லை என்று தெரிந்த பின்னரே, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்கி, மூன்று நபர்கள் மீது கடந்த ஜனவரியில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அதன்பின், இயல்பான நிலையில் அவ்வழக்கு சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்க, வேங்கைவயல் விவகாரத்தில் நீதி விசாரணை தேவை; சி.பி.ஐ., விசாரணை தேவை என்று, அனைத்து அரசியல் கட்சிகளும் கூக்குரல் எழுப்புகின்றன!
பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் மீது, மாற்று இனத்தவர்கள் வன்கொடுமை செய்திருந்தால் தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பொருந்தும்; அதற்காக உள்ள தனி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்படும். அவ்வாறு இல்லாத போது, சம்பந்தபட்ட குற்றவியல் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்படுவது தான் நடைமுறை.
இது, முன்னாள் அமைச்சரும், பார்லிமென்ட் மற்றும் சட்டசபை உறுப்பினர், வழக்கறிஞர் என்று பன்முகம் கொண்ட செம்மலைக்கு தெரியாதா?
நீதி கிடைக்க வழிசெய்ய வேண்டும்!
சு.ராமலிங்கம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தலைமை செயலகத்தில் செயல்படும் முதல்வரின் மக்கள் குறைதீர்ப்பு மையத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் ஒரு புகார் கொடுத்து, ஒப்புதல் நகலை பெற்று உரிய அலுவலகத்தில் கொடுத்தால், 15 நாட்களுக்குள் தீர்வு கிடைத்து விடும்.
ஆனால், இன்றோ அவ்வாறு நடப்பதில்லை.
வேலை வாங்கி தருவதாக கூறி என்னிடம், 1 லட்சத்து, 75,000 வாங்கி, ஒருவர் ஏமாற்றி விட்டார். காவல் துறை சென்னை ஆணையர், துணை ஆணையர், இயக்குநர் என பலரிடம் உரிய ஆவணங்களோடு புகார் அளித்தும் பலனில்லை.
இதில், மயிலாப்பூர் துணை ஆணையர் ராஜத் சதுார்வதி ஒருவர் தான், நான் அளித்த புகாரை முழுதுமாக படித்தவர்; அத்துடன் செயலிலும் இறங்கினார். என் துரதிர்ஷ்டம், அவர் பணிமாறுதலில் கள்ளக்குறிச்சி சென்று விட்டார்.
அதன்பின் எந்தவித நடவடிக்கையும் இல்லை; இரண்டு ஆண்டுகள் கடந்தன. முதல்வர் மக்கள் குறைதீர் மையத்தில் 2024 செப்.,ல் புகார் அளித்தேன்; டிசம்பர் வரை பதில் இல்லை. மையத்திற்கு போன் செய்து கேட்டால், புகாரை உதவி ஆணையருக்கு அனுப்பி விட்டதாக சொன்னார்கள்.
உதவி ஆணையருக்கு போன் செய்தால் புகாரை முடித்து வைத்துவிட்டதாக கடிதம் வந்திருப்பதாக கூறினார். ஆனால், யார் முடித்து வைத்தனர் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்!
அரசு துறைகள் எப்படி இயங்குகின்றன என்பதற்கு, இது ஓர் உதாரணம்.
தமிழக அரசு, மக்கள் பிரச்னைகளை தீர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு துறைகள் ஆரம்பித்தால் மட்டும் போதாது; அதன் செயல்பாடுகளை கவனித்து, கருப்பு ஆடுகளை களையெடுத்து, பாதிக்கப் பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்!
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், குறைதீர் மையத்தின் செயல்பாடுக்கு, என் அனுபவம் ஒன்றே போதும்!

