தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ கருவாடு கூட மீனாகலாம்; ஆனால்...

கருவாடு கூட மீனாகலாம்; ஆனால்...

கருவாடு கூட மீனாகலாம்; ஆனால்...


PUBLISHED ON : மே 07, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ருக்மணி தேவி, பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்திய தேர்தல் பிரசாரத்தின்போது, காங்., சிதம்பரம், 'வரும் காலங்களில், காமராஜரைப் போல் சிறப்பான ஆட்சி புரிந்தவர் என்ற பெயரை மு.க.ஸ்டாலின் பெறுவார்' என்றார்.

எளிமையான, துாய்மையான, நேர்மையான, ஓட்டுகளைப் பற்றிச் சிந்திக்காமல், மக்கள் நலன் மட்டுமே குறிக்கோள் என்று வாழ்ந்தவர் காமராஜர். மதுவிலக்கை அமல்படுத்தியவர். அவர் ஆட்சி செய்த காலத்தில், பொதுப் பணியில் ஈடுபட்டவர்களும் நேர்மையாளராக இருந்தனர்; வைகை அணையைக் கட்டிய ஒப்பந்ததாரர், எஞ்சிய பணத்தை, அரசிடமே கொடுத்தார் என்பது வரலாறு.

தற்போது, ஒப்பந்ததாரர், அமைச்சர், அதிகாரிகள், வட்டம், மாவட்டம் என்று சகல தரப்பினரும் பங்கிட்டுக் கொண்ட பின், எஞ்சிய பணத்தில், தரமில்லாத பணிகள் தான் நடக்கின்றன. இப்படிப்பட்ட ஆட்சியை, காமராஜர் ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பேச, சிதம்பரத்துக்கு எப்படி மனம் வந்தது?

சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற, 'என் மண்; என் மக்கள்' யாத்திரையின்போது ஒருவர், பா.ஜ., அண்ணாமலையிடம், 'உங்களை வாழும் காமராஜராக பார்க்கிறேன்' என்றார்.

உடனடியாக குறுக்கிட்ட அண்ணாமலை, 'அண்ணா... முன்னாள் முதல்வர் காமராஜருக்கு நிகர், இவ்வுலகில் யாரும் தற்போது இல்லை. அதனால், என்னை அவ்வாறு புகழ்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. காமராஜருக்கு நிகர் காமராஜர் மட்டுமே' என்று கூறினார்.

கருவாடு கூட மீனாகலாம்; ஸ்டாலின் ஒரு போதும் காமராஜர் ஆக முடியாது.



எத்தனை நாளைக்கு நீர், மோர் பந்தல்?


வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ --- மெயில்' கடிதம்: ------------------------------திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, இடையக்கோட்டை கிராமத்தில், 120 ஏக்கர் பரப்பளவு நிலம் சீரமைக்கப்பட்டு, ஆறு லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, மியாவாக்கி குறுங்காடு உருவாக்கப்பட்டது. அமைச்சர் சக்கரபாணி தான் முழு முயற்சியில் இதைச் செய்தார்.

நடவு செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது; இன்று அந்த இடம் குளுகுளுவென கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.

தான் வெற்றி பெற்ற தொகுதிக்கு, எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 'மக்களுக்காக நான் இதை செய்தேன்; அதைச் செய்தேன்; இந்தந்த திட்டங்களை எல்லாம் கொண்டு வந்தேன்' என்று பட்டியலிட்டு பெருமை கொள்ளுவது ஒரு பக்கம் இருந்தாலும்...

இந்த பூமியையும் சுற்றுச் சூழலையும் பாதுகாக்க வேண்டும்; எதிர்கால சந்ததியினருக்கு பூமியை ஆரோக்கியமாக விட்டுச் செல்ல வேண்டுமென்ற நோக்கில் அமைச்சரின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது; முன்மாதிரியானது! இதை மற்ற மக்கள் பிரதிநிதிகளும் பின்பற்ற வேண்டும்!

மீண்டும் மஞ்சப்பை இயக்கம், 10 ரூபாய்க்கு மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் செயல்பாடு என்பது ஆமை வேகத்தில் தான் உள்ளது.

கிராம பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மையில், உள்ளாட்சி நிர்வாகத்திற்கு அக்கறையில்லை.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் உற்பத்தி, விற்பனை, பயன்படுத் துதல் ஆகிய நடவடிக்கைகள், குக்கிராமம் முதல், பெரும் நகரம் வரை, தாராளமாக நடந்து கொண்டிருக்கின்றன. இதை, இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு என தெரிந்தும்,டீக்கடையில் பாலித்தீன் பைகளில் டீ, காபி வாங்கிச் செல்வது அதிகரிக்கிறது.

மாநிலத்தின் வனப்பரப்பை, 33 சதவீதம் உயர்த்தவும், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் வெப்பத்தை குறைக்கவும், பொதுமக்கள், தனியார் அமைப்பு, தொண்டு நிறுவனங்கள், மாநில அரசு ஆகியவை ஒருங்கிணைந்து, மரம் நடும் பணியை, தீவிர இயக்கமாக நடத்த வேண்டிய காலம் வந்துவிட்டது.

கிராம பஞ்சாயத்து முதல் மாநகராட்சி வரையிலான உள்ளாட்சி அமைப்புகள், தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், விரும்பும் தனியார் இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்வதற்கான இடங்களை விரைவில் தேர்வு செய்து, மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றி முறையாக பராமரிப்பதையும், உறுதி செய்வதையும் ஆண்டுக்கு மூன்று முறை அதன் வளர்ச்சியை கண்காணிக்கவும், குழுக்கள் அமைக்க வேண்டும்.

பல்வேறு கட்சியினர், கோடை காலத்தில், நீர்மோர் பந்தல் திறப்பது ஒரு புறம் நடந்தாலும், வெயிலைத் தவிர்க்க, நிரந்தர தீர்வாக, மரங்களை வளர்க்கும் இயக்கத்தை முன்னெடுக்கலாம்.



வெறுப்பு பேச்சு என்ற வினோதம்!


கு.காந்தி ராஜா, சென்னை யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமர் மோடி, தன் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசும்போது, வெறுப்பு அரசியலை துாண்டி விடுவதாக, 'இண்டியா' கூட்டணியைச் சேர்ந்த ராகுல் உள்ளிட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மோடி தன் அரசியல் வரலாற்றில், ஒரு முறை கூட, இஸ்லாமியர்களையோ, கிறிஸ்துவர்களையோ, அவர்களது மத நம்பிக்கைகளையோ, வழிபாட்டு முறைகளையோ குறைவுபடுத்தியோ இழிவு படுத்தியோ பேசியதில்லை.

ஹிந்துக்களையும், ஹிந்து சமயத்தை பற்றியும் அரசியலில் உயர் பதவிகளில் உள்ளவர்கள், எவ்வளவு தரம் தாழ்ந்து விமர்சித்தாலும், அது அரசியல் இல்லையாம்.

ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித் ஆகியோருக்கான சலுகைகளையும், வளங்களையும் பறித்து, இஸ்லாமியர்களுக்கு வழங்குவோம் என்ற காங்கிரசின் செயல்திட்டத்தை மக்களிடம் அம்பலப்படுத்துவது, வெறுப்பு அரசியலாம்.

காங்கிரஸ், தி.மு.க., போன்ற கட்சிகளின் இத்தகைய ஏமாற்று வேலைகளை, மக்கள் இன்னும் எத்தனை காலம்நம்புவர்? இதெல்லாம் இந்தியாவில் இப்போது கடைப்பிடிக்கப்படும் போலி மதச்சார்பின்மையின் பக்க விளைவுகள்.

மதச்சார்பின்மை என்பது, ஹிந்துக்களுக்கு மட்டுமே என்பது ஓர் எழுதப்படாத விதியாக இருந்து கொண்டிருக்கிறது. இது ஏன் என்று மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். இவர்கள் எத்தனை காலம் இளிச்சவாயர்களாகவே இருப்பர்?

மதச்சார்பற்ற நாட்டில் அனைத்து மதத்தினரும் சமமாகத்தான் நடத்தப்பட வேண்டும். காங்கிரசும், தி.மு.க., கூட்டணியினரும், ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த நினைப்பதை எப்படி அனுமதிக்க முடியும்?



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us