/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
மக்கள் பிரச்னைக்கும் முக்கியத்துவம் தாங்க!
/
மக்கள் பிரச்னைக்கும் முக்கியத்துவம் தாங்க!
PUBLISHED ON : மே 12, 2024 12:00 AM

வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்து, 39 தொகுதிகளின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 39 மையங்களில் வைக்கப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளரின் முகவர்கள், 24 மணி நேரமும் பாதுகாப்பில் உள்ளனர். அறைக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி, ஈரோடு, தென்காசி, விழுப்புரம் தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் செயல்பாடு முடங்கியதால், உடனே பழுது சரி செய்யப்பட்டுள்ளது.
'அய்யோ... அந்த தொகுதியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு இயந்திரங்கள் அறையில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் செயல்படவில்லை... இந்த தொகுதியில் செயல்படவில்லை' என, கட்சிக்காரர்கள் கொதித்து பொங்கி எழுந்து விட்டனர். கடும் உழைப்பை கொடுத்து, பெருமளவு பணம் செலவு செய்து, ஒவ்வொரு வேட்பாளரும் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
சில மணி நேரத்திற்குள் கேமராக்கள் சரி செய்யப்பட்ட போதிலும், அந்த சில மணி நேரம் கட்சியினரால் நிலைகொள்ள முடியவில்லை; தவியாய் தவித்து விட்டனர்.
அதே நேரம், நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதி, ஐந்தாண்டுகள் நமக்காக நடுநிலையுடன் உண்மையாக உழைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதும் நியாயம் தானே?
சில மணி நேரம் கேமராக்கள் செயல்பாடு முடங்கியதால், கொதித்து போராட்டத்தில் குதிக்கின்றனரே... பல நாட்களாக மின்சாரம், குடிநீர் வசதியின்றி, எத்தனையோ ஊர்களில் மக்கள் இன்றும் அல்லல்பட்டு தான் இருக்கின்றனர். தரமில்லாத சாலை, தரமில்லாத குடிநீர் குழாய், தரமில்லாத கட்டுமானங்கள், முறையாக குடிநீர் வினியோகமின்மை, அள்ளப்படாத குப்பை, கொசு மற்றும் நாய் தொல்லை, லஞ்சம் கொடுத்து அரசு அலுவலகங்களில் சேவையை பெற வேண்டிய அவலநிலை என, மக்களின் அவதிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
கேமரா பழுதுக்காக கொதித்து எழுபவர்கள், இதுபோன்ற மக்களின் அத்தியாவசிய பிரச்னைகளுக்கும் கொதித்து எழுந்து, அவற்றை உடனே தீர்ப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும்.
கூட்டுக் குடும்பத்தை சிதைத்தது யார்?
எஸ்.ராமசுப்பிரமணியன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலகில் உள்ள எந்த
நாட்டிலும், மதத்திற்கு வளைந்து கொடுக்கும் சட்டங்கள் உள்ளதாக தெரியவில்லை.
மதச்சார்பின்மை என்ற லேபிளை ஒட்டிக் கொண்டிருக்கும் இந்தியாவில் மட்டும்
தான், ஹிந்துக்களுக்கு ஒரு சட்டம், இஸ்லாமியர்களுக்கு அவர்களுடைய
மதச்சட்டம் என்ற பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது.
தசரதருக்கு நான்கு பிள்ளைகள்; பாண்டுவுக்கு ஐந்து பிள்ளைகள்.
பகவான் கிருஷ்ணரே, தேவகிக்கு எட்டாவது குழந்தையாக அவதரித்தவர் தான்; குசேலருக்கு 27 பிள்ளைகள்; நாரதருக்கு 60 பிள்ளைகள்.
இப்படி
வரலாறு கொண்ட நாட்டில், மக்கள் தொகை பெருகுகிறது என்ற கோணத்தில், அதைக்
கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்டது தான் குடும்பக் கட்டுப்பாடு திட்டம்.
இந்த
திட்டம், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது தான் நாடு முழுவதும்
அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு ஒரு சிம்பல், சிவப்பு முக்கோணம்.
இந்த
திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது, 'முத்தான குடும்பத்திற்கு மூன்று
குழந்தைகள்' என்றனர். அடுத்த சில ஆண்டுகளுக்கு பிறகு, 'சிறு குடும்பமே
சீரான வாழ்வு' என்றும், 'நாம் இருவர் நமக்கிருவர்' என்றும் சுருக்கினர்.
பின் அதையும் சுருக்கி, 'ஒளிமயமான வாழ்வுக்கு ஒரு குழந்தை போதுமே' என்றனர்.
கூட்டுக் குடும்ப முறை சிதைந்ததற்கும், முதியோர் இல்லங்கள் பல்கிப் பெருகியதற்கும் மூல காரணம், காங்கிரஸ் என்றால் மிகையில்லை.
ஆனால், இந்த கு.க., திட்டம், ஹிந்துக்களுக்கு மட்டும் தானே தவிர, இஸ்லாமியர்களுக்கு அல்ல.
அவர்கள் நான்கு திருமணங்கள் செய்து கொள்ளலாம்; 40 குழந்தைகளும் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த
விதிவிலக்கு திட்டத்தை பொறுத்துக் கொள்ள இயலாமல் தான், பிரதமர்
இந்திராவின் இளைய மகன் சஞ்சய், டில்லி துர்க்மான் கேட் எந்த இடத்தில்
இருந்த முஸ்லிம் குடியிருப்புகள் அனைத்தையும், புல்டோசர் வைத்து நொறுக்கி
தள்ளினார். இந்த சம்பவம் நடந்த அடுத்த சில ஆண்டுகளில், சஞ்சய் விமான
விபத்தொன்றில் சிக்கி மரணமடைந்தது வரலாறு.
எதற்காக இந்த பண்டைய வரலாறு?
சில
நாட்களுக்கு முன், காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவு தலைவர் சாம்
பிட்ரோடா, வெளிநாடுகளில் செல்வந்தர் ஒருவர் மறைந்தால், அவரது சொத்துக்களில்
50 சதவீதத்தை மத்திய அரசு கைப்பற்றிக் கொள்ளும் என்றும், மீதியுள்ள 50
சதவீதத்தையே, இறந்தவரின் குடும்பத்தினர் பிரித்துக் கொள்ள வேண்டும் என்றும்
சட்டம் இருப்பதாகவும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி பீடம் ஏறினால் அந்த
சட்டம் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஒரு குண்டை எடுத்து
வீசினார்.
அந்த 50 சதவீத, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள், ஏழை எளியவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என்றும் கூறி இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த, காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, 'எனக்கு ஐந்து பிள்ளைகள்' என்றார்.
நம்முடைய கேள்வி எல்லாம் இது தான்.
காங்கிரஸ்
கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஐந்து பிள்ளைகள் பெறுவதற்கு அனுமதி
அளித்த காங்கிரஸ் அரசு, மற்ற ஹிந்துக்கள் கூடுதலாக குழந்தைகள் பெறுவதை ஏன்
தடை செய்தது? ஏன் அனுமதிக்கவில்லை?
அந்த தடையை இந்தியாவில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் என, ஏன் விஸ்தரிப்பு செய்யவில்லை?
இந்த
நாடு கெட்டு குட்டிச்சுவரானதற்கும், கூட்டுக்குடும்ப முறை சிதைந்ததற்கும்,
முதியோர் இல்லங்கள் பெருகியதற்கும், பந்தமும் பாசமும் காணாமல் போனதற்கும்,
குடும்பங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போனதற்கும் மூல காரணகர்த்தாக்களே
இந்த காங்கிரஸ் கட்சியினர் தான் என்பது இப்போதாவது விளங்குகிறதா மக்களே?